‘அம்மாவின் ஆவிதான் தினகரனை ஜெயிலுக்கு அனுப்பியது’.. பொன்னையன் ஹேப்பி
ஜெயலலிதாவின் ஆவிதான் டிடிவி தினகரன் செய்த தவறை கண்டுபிடித்து சிறையில் தள்ளியுள்ளது என்று ஓபிஎஸ் டீம் பொன்னையன் கூறியுள்ளார்.
சென்னை: இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்கப்பட்ட புகாரில் தினகரன் கைது செய்யப்பட்டதற்கு 'அம்மாவின் ஆவிதான் காரணம்' என்று கூறுகிறார் ஓபிஎஸ் அணியில் உள்ள பொன்னையன்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பொன்னையன் கூறியதாவது: ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சசிகலா குடும்பம் கட்சியை அபகரித்துக் கொள்ள வேண்டும் என்று செயல்பட்டது. அதற்கான பலனை தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
இந்தியாவே தமிழகத்தை கேவலமாக பார்க்கும் அளவிற்கு தினகரன் கோடிக் கணக்கில் லஞ்சம் கொடுத்துள்ளார். இது சசிகலா குடும்பத்திற்கே வெட்கக்கேடான செயல். இதை யாரும் மன்னிக்க முடியாது.
கிரிமினல்
அளவு கடந்த அளவிற்கு லஞ்சத்தை கொடுத்து தேர்தல் ஆணையத்திடம் சின்னத்தை வாங்கக் கூடிய கிரிமினல் நடவடிக்கையில் தினகரன் ஈடுபட்டுள்ளார். அவர் கைது செய்யப்படுவதற்கு காரணம் ஜெயலலிதாவின் ஆன்மாதான். அவரின் ஆவிதான் உண்மையை கண்டறிந்தது.
அழிக்க..
ஓபிஎஸ் அணியை அழிக்கத்தான் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்கப்பட்டது. இதனை ஏற்க முடியாது. இதனை தர்ம தேவதை கண்டுபிடித்துவிட்டாள். ஆழமான ஆதாரம் இருந்த காரணத்தால்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் ஓபிஎஸ் அணியில் இருக்கும் அனைத்து தொண்டர்களும் மகிழ்ச்சியில் இருக்கிறோம்.
தொடர்பில்லை
பாஜகதான் இதற்கு காரணம் என்று நாங்கள் நினைக்கவில்லை. எதற்கெடுத்தாலும் பாஜக என்று சொல்லிவிட்டு கொலைகளை புரிந்து கொண்டே இருக்கலாமா? லஞ்சத்தை கொடுத்துக் கொண்டே இருக்கலாமா? பாஜகவிற்கும் ஓபிஎஸ் அணிக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
எதிர்ப்போம்
பாஜக தேசிய கட்சி. நாங்கள் மாநில கட்சி. மத்திய அரசு செய்யும் செயல் தமிழகத்திற்கு எதிராக இருக்கும் போது எதிர்க்கிறோம். ஏதோ ஒன்றை சொல்ல வேண்டும் என்று சொல்வதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை.
விருப்பம்
ஓபிஎஸ் அணி ஒன்னரை கோடி தொண்டர்களுடைய அணி. அவர்களின் கோரிக்கை ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க சிபிஐ விசாரணை வேண்டும். ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களாக கருதப்படுகிற சசிகலா குடும்பம் கட்சியில் இருக்கக் கூடாது. இந்த 2 கோரிக்கையும்தான் எங்களுக்கு முக்கியம்.
ஓரணியில்..
இரு அணிகளும் இணைவது குறித்து எங்களிடம் நிபந்தனைகள் எதுவும் இல்லை. பேச்சுவார்த்தை நடக்கும். ஜெயலலிதாவின் பற்றாளர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.பதவி எல்லாம் எங்களுக்கு தேவையில்லை என்று பொன்னையன் கூறினார்.