ஈபிஎஸ் அணியுடன் இணையுமா ஓபிஎஸ் அணி.. இன்று நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை
சென்னையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் இன்று நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடைபெற உள்ளது.
சென்னை: ஓபிஎஸ் மற்றும் நிர்வாகிகள் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்த உள்ளனர்.
தமிழக முதல்வர் பழனிச்சாமி, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்று இன்று அறிவித்தார். மேலும், அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு அரசுடைமையாக்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்பு ஓபிஎஸ் அணியுடன் ஈபிஎஸ் அணி இணைவதற்காகவே என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ்ஸின் இல்லத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ், கே.பி. முனுசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்த நிலையில், ஓபிஎஸ் அணியினர் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.