தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் சுற்றுப்பயணம் - மே 5முதல் 31 வரை தொண்டர்களை சந்திக்கிறார்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், காஞ்சிபுரம் தொடங்கி கன்னியாகுமரி வரை மே 5 முதல் 31 வரை தொண்டர்களை சந்திக்கிறார்
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மே 5ம் தேதி முதல் 31 வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்கிறார். காஞ்சிபுரத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் அவர் கன்னியாகுமரியில் பயணத்தை முடிக்கிறார் என்று ஓபிஎஸ் அணியின் கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.
அதிமுகவில் பிளவுபட்டுள்ள இரு அணிகள் இணைப்பு முயற்சிக்கான பேச்சுவார்த்தை ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறது. இரு அணியினரும் மாறு பட்ட கருத்துக்களை கூறி வருவதால் பேச்சுவார்த்தைக்கு இணக்கமான சூழல் உருவாகவில்லை.
நிபந்தனைகள்
ஓபிஎஸ் அணி விதிக்கும் நிபந்தனையை ஏற்க ஈபிஎஸ் அணியினர் தயாராக இல்லை. அதே நேரத்தில் நிபந்தனை எதுவும் இன்றி பேச தயாராக இல்லை என்று ஓபிஎஸ் அணியினர் கூறி விட்டனர். இது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுப்பயணம்
அணிகள் இணைப்புக்கான சாத்தியம் தற்போது இல்லாத சூழ்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மே 5 முதல் தொடங்கப் போகிறார். மாநிலம் முழுவதும் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்திக்கப் போகிறார் ஓபிஎஸ். இதனை இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் அணியின் கே.பி முனுசாமி உறுதி செய்துள்ளார்.
காஞ்சிபுரம் முதல் கன்னியாகுமரி வரை
காஞ்சி டூ குமரி வரை 32 மாவட்டங்களுக்கும் செல்லும் ஓபிஎஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், உள்ளிட்ட பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்களை சந்தித்து பேசுகிறார்
உள்ளாட்சி தேர்தல்
ஜூலை மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது பற்றியும் தொண்டர்கள், நிர்வாகிகளிடம் பேசப்போவதாக ஓபிஎஸ் அணியின் கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா
ஒருமாத காலம் சுற்றுப்பயணம் செய்யும் ஓபிஎஸ் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சென்னையில் ஜூன் 8, 9, ஆகிய தேதிகளில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார் என்றும் முனுசாமி தெரிவித்தார். தொண்டர்கள், நிர்வாகிகள் பலம் யாருக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்க கிளம்பிவிட்டார் ஒபிஎஸ்.