ஜெயலலிதா உடலுக்கு வெங்கையா நாயுடு, ஓபிஎஸ், தம்பித்துரை கண்ணீர் அஞ்சலி
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக எம்.பி. தம்பித்துரை ஆகியோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை: உடல்நலக்குறைவால் 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்றிரவு சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து போயஸ் தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது.
இறுதி சடங்குகள் செய்யப்படும் போதும் போயஸ் தோட்ட இல்லத்திற்குள் ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள் யாரையும் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட சில அமைச்சர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
ஜெயலலிதாவின் குடும்ப முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு அதிகாலை 6 மணிக்கு ஜெயலலிதாவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள், தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசு மரியாதை செய்யப்பட்டு தேசிய கொடி போர்த்தப்பட்டது.
ஜெயலலிதா உடலுக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது ஓ.பன்னீர் செல்வம் கண்ணீர் விட்டு அழுதார். அவரைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அதிமுக எம்.பி. தம்பித்துரையும் அஞ்சலி செலுத்தினார். தங்களின் தலைவி மறைவுக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் தலையில் அடித்துக்கொண்டும் கதறி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் ஆகியோர் ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.