குடும்பத்தின் பின்னால் செல்லாமல் இணைய தயார் - அம்மா அணிக்கும் ஓபிஎஸ் வரவேற்பு!
அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியுடன் பேச்சு வார்த்தை நடத்த அதிமுக அம்மா அணி குழு அமைத்துள்ளதற்கு ஓபிஎஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பேச்சுவார்த்தை நடத்த அதிமுக அம்மா அணி குழு அமைக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக பிரிந்தன. இடைத்தேர்தலின் போது கட்சி, சின்னம் முடக்கப்பட்டது. இதனை வைத்து பலரும் குளிர்காய நினைத்தனர். ஆட்சி கவிழும் விரைவில் பொதுத்தேர்தல் வரும் என்று தெரிவித்து வந்தனர். ஆனால் நான்கு ஆண்டு கால ஆட்சியைக் காப்பாற்ற சமாதானமாக போனால் மட்டுமே கட்சி, சின்னம், ஆட்சியைக் காப்பாற்ற முடியும் என்று அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவருமே அறிந்துள்ளனர்.
ஓபிஎஸ் கிரீன் சிக்னல்
இதற்கு முதல்படியாக நேற்று டுவிட்டரில் பேசத்தயார் என்று பதிவிட்டார் ஓ.பன்னீர் செல்வம், அமர்ந்து பேசுவோம் என்று நேரடியாகவே கூறினார். இந்த நிலையில்தான் தலைமை செயலகத்தில் அதிமுகவின் இரு அணிகளும் இணைவது பற்றி பேச தயார் என தம்பிதுரை தெரிவித்தார். அதற்கான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ஓ. பன்னீர் செல்வமும் தெரிவித்திருந்தார்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார். நேற்றிரவு விடிய விடிய அமைச்சர்கள் வீட்டில் ஆலோசனை நடைபெற்றது. இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வம் அணியுடன் பேச குழு அமைக்கப்பட்டது. இது அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
ஓபிஎஸ் வரவேற்பு
நேற்று தேனி சென்ற ஓ.பன்னீர் செல்வம் அவசரம் அவசரமாக சென்னை திரும்பினார். பேச்சுவார்த்தை நடத்த அதிமுக அம்மா அணி குழு அமைந்துள்ளதற்கு பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார். அவர் தனது அறிக்கையில், ஒரே குடும்பத்துடன் கட்சி செல்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இணைய தயார்
எம்.ஜி.ஆர், அதிமுக கொள்கைகளை மாறாமல் கொண்டு செல்ல யார் விரும்பினாலும் இணைய தயார் என்றும் அவர் கூறியுள்ளார். பேச்சுவார்த்தை தொடர்பாக இன்று மாலை செய்தியாளர்களுடன் சந்திக்க உள்ளதாகவும் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.