மீனவர்களுக்குப் பாதகமான மீனா குமாரி அறிக்கையை ஏற்காதீர்.. மோடிக்கு ஓ.பி.எஸ் கடிதம்
சென்னை: நமது கடல் பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை அன்னிய நிறுவனங்களுக்கு கொடுப்பது சரியாக இருக்காது. புதிய வழிகாட்டுதல் முறைகளை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்கிறது. இந்திய மீனவர்களின் உரிமையை தேவையில்லாமல் கட்டுப்படுத்தும் வகையில் புதிய நடைமுறைகள் உள்ளன.
ஏற்கனவே 20 மீட்டர் நீளம் உள்ள படகுகளை வைத்திருப்பவர்கள் என்ன செய்வது. அவர்கள் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. உள்ளூர் மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மீனாகுமாரின் அறிக்கைகள் உள்ளன. அதன் பரிந்துரையை ஏற்க கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
சமீபத்தில் மத்திய விவசாயத்துறையின் கீழ் உள்ள கால்நடை பராரிப்பு மற்றும் மீன்வளத்துறை சார்பில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது மீனவர்களுக்கு எதிராக அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்திய ஆழ்கடல் பகுதியான சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் வெளிநாட்டு மீனவர்கள் மீன்பிடிக்கும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்திய மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் 20 மீட்டர் நீளம் வரை உள்ள படகுகளை கொண்டு மீன்பிடிக்கலாம் என்று விதிகள் இருக்கின்றன. தற்போது 2014 நவம்பர் மாதம் 12-ந்தேதி வெளியிடப்பட்ட உத்தரவில் படகுகளின் நீளம் 15 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 49 சதவீத அன்னிய முதலீடு கொண்ட நிறுவனங்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 20 மீட்டர் நீளம் கொண்ட படகுகளை ஏராளமான மீனவர்கள் வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் இந்த வகையில் 5500 எந்திர படகுகள் உள்ளன. அவை எல்லாமே 15 மீட்டருக்கு மேல் நீளமானதாகும். அவை ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க கூடாது என்றால் 80 சதவீத மீன்பிடி படகுகள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்படும்.
மேலும் 15 மீட்டருக்கு மேல் உள்ள படகுகள் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இத்தகைய படகு வைத்திருக்கும் மீனவர்கள் அந்தந்த மாநில அரசுகளிடம் பதிவு செய்திருந்தால் போதும் என்று உள்ளது. ஆனால் இப்போது மத்திய அரசிடம் அனுமதி கேட்க வேண்டும் என்று சொல்வதன் மூலம் அவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது.
நமது கடல் பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை அன்னிய நிறுவனங்களுக்கு கொடுப்பது சரியாக இருக்காது. புதிய வழிகாட்டுதல் முறைகளை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்கிறது. இந்திய மீனவர்களின் உரிமையை தேவையில்லாமல் கட்டுப்படுத்தும் வகையில் புதிய நடைமுறைகள் உள்ளன.
ஏற்கனவே 20 மீட்டர் நீளம் உள்ள படகுகளை வைத்திருப்பவர்கள் என்ன செய்வது. அவர்கள் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. உள்ளூர் மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மீனாகுமாரின் அறிக்கைகள் உள்ளன. அதன் பரிந்துரையை ஏற்க கூடாது. முறையாக ஆய்வுகளை மேற்கொண்டு மீனாகுமாரியினுடைய அறிக்கை தயார் செய்யப்படவில்லை. எனவே அதை ஏற்று எந்த வழிகாட்டுதலையும் மத்திய அரசு கொண்டு வரக்கூடாது.
மத்திய அரசு புதியதாக ஏதேனும் வழிகாட்டுதல் முறைகளை கொண்டு வந்தால் அதை முறையாக ஆய்வு நடத்தி செய்ய வேண்டும். இது சம்மந்தமான மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும்போது அனைத்து கடலோர பகுதி மாநிலங்களின் மீன்வள மந்திரிகளிடம் ஆலோசனை நடத்திவிட்டு ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
தமிழகத்தில் உள்ள மீனவர்கள் ஏற்கனவே ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிப்பதற்கு தகுதி படைத்தவர்கள். கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரில் மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கிறார்கள். வருடத்திற்கு 45 ஆயிரம் டன் மீன்களை அவர்கள் பிடித்து வருகின்றனர். நமது மீனவர்களுக்கு உரிய வசதிகளையும், ஊக்கங்களையும் கொடுத்தால் ஆழ்கடல் பகுதியில் இன்னும் அதிக அளவில் மீன்களை பிடிக்க முடியும்.
இந்திய மீனவர்களை ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க வைக்க ஊக்கப்படுத்தும் வகையில் அரசினுடைய வழிகாட்டுதல்கள் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.