மருத்துவர் சரவணன் மரணம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரும் ஸ்டாலின்
சென்னை: சரவணன் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். அதற்கான உரிய அழுத்தத்தை தமிழக அரசு கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதுகலை முதலாமாண்டு பயின்று வந்த தமிழகத்தின் திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரவணன், கடந்த ஜூலை 10இல் அவரது விடுதி அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சரவணன் தற்கொலை செய்து கொள்வதற்கான வாய்ப்பில்லை. அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று சரவணனின் பெற்றோர்கள் தெரிவித்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து, சரவணனின், உடலினை மீண்டும் உடல் கூறாய்வு செய்ய வேண்டும் என அவரது தந்தை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து மருத்துவர் சுதிர் கே.குப்தா தலைமையிலான மருத்துவக் குழுவினர் சரவணனின் உடல் கூறாய்வு செய்து பிரேத பரிசோதனை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், சரவணன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவரது உடலில் யாரோ விஷ ஊசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சரவணன் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். அதற்கான உரிய அழுத்தத்தை தமிழக அரசு கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 'சரவணனின் குடும்பத்தினரை நான் நேரில் சந்தித்து கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்து, ஆறுதல் கூறியதுடன் இந்த மர்ம மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும், வெளியிடங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கையை தமிழகத்தின் முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்தினேன்.
மேலும், நான் அப்போதே வெளியிட்டிருந்த அறிக்கையில், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க நடக்கும் போட்டியில் மாணவன் சரவணன் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற வேறொரு சந்தேகமும் மருத்துவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசும் இந்த மரணம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட்டு, படித்துக் கொண்டிருந்த மாணவனின் உயிர் பறிக்கப்பட்டதில் உள்ள உண்மைகளை வெளிக் கொணர வேண்டும். வெளி மாநிலங்களில் மேல்படிப்புக்காகச் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் அவசரமாக எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்திருந்தேன். இது குறித்து தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திருப்பூர் சரவணனின், உடலினை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது தந்தை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து மருத்துவர் சுதிர் கே.குப்தா தலைமையிலான மருத்துவக் குழுவினர் சரவணன் உடலைக் கூறாய்வு செய்து பிரேத பரிசோதனை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதில், சரவணன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும், அவருக்கு மருத்துவத் தொழிலில் தேர்ச்சி பெற்ற வேறு யாராவது தான் விஷ ஊசியைச் செலுத்தியிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆகவே, இனியாவது சரவணன் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து கொலையாளிகள் கைது செய்யப்பட வேண்டும். முதலமைச்சர் ஜெயலலிதாவும் மத்திய அரசுக்கு உடனடியாக அழுத்தம் கொடுத்து எய்ம்ஸ் மாணவர் சரவணன் கொலையில் தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.