செங்கோட்டையில் முன்பகையால் வாலிபர் படுகொலை- பதற்றத்தை தவிர்க்க போலீஸ் குவிப்பு
செங்கோட்டை: செங்கோட்டையில் முன்பகை தகறாரால் கொத்தனாரான வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டை அருகேயுள்ள மேலூர் வடகாசி அம்மன் கோவில் தெருவை சார்ந்தவர் மூக்கன். இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவரது மகன் முருகேஷ் குமார். இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமலையாண்டி மகன் மணிகண்டன்,ஆகியோருக்கும் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெடி போடுவதில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல் காரணமாக இருவருக்கும் முன்பகை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார் முருகேஷ் குமார். அப்போது சாலையில் நின்ற மணிகண்டனுக்கும், இவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
அதில் முருகேஷ் குமார், மணிகண்டனை தாக்கியதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் வீட்டுக்கு சென்று தனது தந்தையிடம் தகவல் சொல்லவே அவரும்,மணிகண்டனின் தம்பி மாரியப்பன்,மற்றும் சிலரும் சேர்ந்து முருகேஷ் குமார் வீட்டுக்கு வந்து சப்தம் போட்டுள்ளனர்.
அப்போது வாக்கு வாதம் முற்றவே மணிகண்டன் உள்ளிட்டோர் முருகேஷ் குமாரை மறைத்து வைத்திருந்த கத்தி,உள்ளிட்ட ஆயதங்களால் சராமரியாக
தாக்கியுள்ளனர்.
இதில் முருகேஷ் குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரை கொலை செய்த கும்பல் தப்பி ஓடியது.இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வரைந்து வந்து முருகேஷ் குமார் உடலைக் கைப்பற்றி செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவத்தால் இரவிலேயே அந்தப் பகுதியில் எராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.கொலை செய்த மணிகண்டனை இரவோடு இரவாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.