ராஜ்பவனில் ஔவையார் சிலை திறப்பு... கல்வெட்டை தொட்டதும் ஆத்திச்சூடி ஒலிக்குமாம்!
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பெண்புலவர் ஔவையாரின் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சென்னை : கிண்டியில் அமைந்துள்ள ராஜ்பவனில் பெண்புலவர் ஔவையாரின் சிலையை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் திறந்து வைத்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை 156 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு கவர்னர் தங்குவதற்கான மாளிகை,குடியரசுத் தலைவர், பிரதமர், வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் அதற்காக பிரத்யேக மாளிகை, அவற்றைச் சுற்றி பச்சைப் போர்வை போர்த்தியது போல் புல் வெளிகள் அமைந்துள்ளன.
மேலும் 698 புள்ளி மான்கள், 198 அரிய வகை மான்கள், குரங்குகள் போன்ற விலங்கினங்களும் உள்ளன. இந்த ரம்மியமான மாளிகையை சுற்றிப்பார்க்க பொது மக்களுக்கு அனுமதி அளித்து அண்மையில் ஆளுநர் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் முன்பதிவு அடிப்படையில் ஆளுநர் மாளிகையை சுற்றியுள்ள தாவரங்கள், மான் உள்ளிட்டவற்றை பார்த்த மகிழ் அனுமதிக்கப்பட்டனர்.
ஏற்கனவே உலகப்பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் வெண்கலச் சிலைய ராஜ்பவனில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்புலவர் ஔவையாரின் சிலையை வித்யாசாகர் ராவ் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஹைகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிலையில் உள்ள சுவடியில் நாம் எழுதினால் அதன் குரல் வடிவம் நமக்கு கேட்கும் வகையில் சிலைகள் அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.