அபிராமி அழுக்கு... அபிராமி அழுக்கு.. அபிராமி அபிராமி!
சென்னை: தங்களை அழுக்கு என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியதால் ப.சிதம்பரம் தரப்பு கடும் ஆத்திரத்துடன் இருக்கிறதாம்.
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்ற விவாதமும், காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிப் பூசலும் முடிவே இல்லாத நீண்ட பெரும் பயணமாகும்.
என் வாயை நீ நோண்டு.. உன் வாயை நான் நோண்டுகிறேன் என்ற ரீதியில் மாறி மாறி கோஷ்டிகள் சொக்காயைப் பிடிப்பது காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமாகவே மாறிப் போயுள்ளது. இந்த நிலையில் சமீப காலமாக இளங்கோவன் தரப்புக்கும், ப.சிதம்பரத்துக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது.
வாசன் போன பிறகு
ஜி.கே.வாசன் இருந்தவரைதான் கோஷ்டிப் பூசல் அதிகமாக இருந்தது. இனி குறையும் என்று பலரும் நினைத்தனர். ஆனால் அதை விட பல மடங்கு வீரியத்துடன் தற்போது நடந்து வருகிறதாம் சண்டை.
தேவையில்லாத பேச்சு
சமீபத்தில் காரைக்குடியில் நடந்த தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோற்கும் என்று தனக்கு முன்பே தெரியும் என்று பேசியிருந்தார். இது இளங்கோவன் வாயைக் கிளறி விட்டு விட்டது.
கட்டுமானத் தொழிலாளர்கள் மாநாட்டில் குத்து
இந்த நிலையில் மார்ச் 29-ம் தேதி நடந்த அகில இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் மாநாட்டில் பேசிய இளங்கோவன், 'கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த அமைச்சர்களே காரணம். ஆனால் அவர்களோ, காங்கிரஸ் கட்சி தோற்கும் என்பது எங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் என்று பேசுகிறார்கள்.
அழுக்கு.. எல்லாம் அழுக்கு..!
அந்த அழுக்குகள் கட்சியில் இருப்பதால்தான் காங்கிரஸ் தோற்றது. அவர்கள் கட்சியைவிட்டு வெளியேறினாலே காங்கிரஸ் கட்சிக்கு விமோசனம் கிடைக்கும். வெற்றி பெறுவோம் என்று பேசி இருக்கிறார்.
என்ன பேச்சு இது
இளங்கோவன் இப்படிப் பேசியிருப்பது ப.சிதம்பரம் தரப்பை டென்ஷனாக்கியுள்ளது. ஏற்கனவே அப்பாவும், மகனும் வெளியேறினால் நல்லது என்றார். இப்போது அழுக்கு என்கிறார். இதை விடக் கூடாது என்று கொதிக்கிறார்களாம்.
புகார் போடு
இளங்கோவனின் இந்தப் பேச்சு குறித்து ஒரு புகாரை மேலிடத்திற்குத் தட்டி விட்டுள்ளனர். இந்த முறை இளங்கோவனை சும்மா விடக் கூடாது என்று கோபமாக கூறுகிறார்களாம்.
இது வேற...
இந்த நிலையில் தனது மகனுக்கு கட்சியில் ஒரு பெரிய பதவியை வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறாராம் ப.சிதம்பரம். அதாவது மாநில பொருளாளர் பதவியில் கார்த்தியை அமர வைக்க முடியாமல் உள்ளாராம்.
குறுக்கே புகுந்த ஞானம்
ஞானதேசிகன் தலைவராக இருந்தபோதே தனது மகனுக்கு மாநில பொருளாளர் பதவியைப் பெற முயற்சித்தார் ப.சிதம்பரம். அகமது படேல் மூலம் ஆர்டர் போடவும் வைத்தார். ஆனால் ஞானதேசிகன் கார்த்தியை கண்டு கொள்ளவில்லை. கோவைத் தங்கம் கையில் "கல்லா"வைக கொடுத்து விட்டார்.
இப்போதும் முடியலையே
இப்போது இளங்கோவன் தலைவராக இருக்கும் நிலையில் மீண்டும் பொருளாளர் பதவிக்கு முயற்சித்தார் சிதம்பரம். ஆனால் இங்கேயும் முடியவில்லையாம்.
இப்படி அடுத்தடுத்து இளங்கோவன் தனக்கு எதிராக "டேம்" கட்டி வருவதால் "டெர்ரர்" முகத்துடன் வளைய வருகிறாராம் ப.சிதம்பரம்.