'இணைந்த கைகளாகும்' ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் - ப.சிதம்பரம்.. அரங்கேறும் சமாதானப் படலம்!
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில் எதிரும் புதிருமாக இருந்து வரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் ப. சிதம்பரமும் இனி இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். இதன் முதல் கட்டமாக ப. சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் இன்று இளங்கோவனை சந்தித்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
காங்கிரஸில் இருந்து ஜி.கே.வாசன் ஆதரவாளர்களுடன் பிரிந்து சென்று த.மா.கா. தொடங்கியதும் காங்கிரஸ் மிகப்பெரிய தடுமாற்றத்தை சந்தித்தது. கட்சி மேலிடம் உடனடியாக இளங்கோவனை மாநில தலைவராக நியமித்தது.
இதனால் ப.சிதம்பரம், தங்கபாலு உள்ளிட்ட பிற தலைவர்கள் காங்கிரசை கை தூக்கி விட கை கோர்த்தனர். ஆனால் இந்த ஒற்றுமை நீண்ட காலம் நீடிக்கவில்லை.
சர்ச்சை கார்த்தி
சத்தியமூர்த்தி பவனில் நடந்த விழாவில் கார்த்தி ப.சிதம்பரம் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்ய மீண்டும் உட்கட்சி பூசல் வெடித்தது.
இளங்கோவனுடன் மோதல்
ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் தனி கூட்டம் நடத்தினார்கள். இதற்கு விளக்கம் கேட்டு இளங்கோவன் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் டெல்லி மேலிடத்திலேயே நானே பேசிக் கொள்கிறேன் என்று கார்த்தி ப.சிதம்பரம் இளங்கோவனுடன் மோதினார்.
சர்ச்சை பேச்சு...
இதன் பின்னர் ஜெயந்தி நடராஜன் கட்சியில் இருந்து வெளியேறிய போது ‘இன்னொரு தலைவரும் தனது மகனுடன் வெளியேறினால் நல்லது' என்று இளங்கோவன் கருத்து தெரிவித்தார்.
மாறி மாறி புகார்
கொந்தளித்த ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் இளங்கோவனுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். இரு தரப்பும் டெல்லியில் புகார் மனுக்களை குவித்தனர்.
குஷ்பு வருகை
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் நடிகை குஷ்பு இணைந்தார். ஆனால் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் குஷ்புவை புறக்கணித்தே வந்தனர்.
புறக்கணிப்பு
அதனைத் தொடர்ந்து புதிய மாவட்ட தலைவர்கள் நியமனத்திலும் ப.சிதம்பரம் ஆதரவாளர்களுக்கு போதுமான இடம் அளிக்கவில்லை.
கை கோர்க்க முடிவு
இந்த பஞ்சாயத்துக்கு முடிவு கட்ட சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதன் முதல் கட்டமாக ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் இன்று மாலையில் சத்தியமூர்த்தி பவனில் இளங்கோவனை சந்தித்து பேசுகிறார்கள்.
ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர்களான கே.ஆர்.ராமசாமி, அழகிரி, வள்ளல் பெருமான், சுந்தரம், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் இளங்கோவனை சந்தித்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இருதரப்பும் இனி 'நட்பு' சக்திகளாக இணைந்து செயல்படலாம் என கூறப்படுகிறது.