மோடியின் காலடியில் விழுந்து கிடக்கின்றனர் ஓபிஎஸ், ஈபிஎஸ்… ப. சிதம்பரம் பொளேர்
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், இன்னாள் முதல்வர் ஈபிஎஸ் என இருவருமே பிரதமர் மோடியின் காலடியில் விழுந்து கிடக்கின்றனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இருவருமே மோடியின் காலில் விழுந்து கிடக்கின்றனர் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ப. சிதம்பரம் இன்னும் 650 நாட்களில் மத்தியில் புதிய ஆட்சி அமையும் வாய்ப்புள்ளது என்று கூறினார்.
அப்படி அமையும் புதிய அரசு, விவசாயிகள், பொதுமக்கள் நலன் காக்கும் அரசாக அமையும் என்று சிதம்பரம் நம்பிக்கைத் தெரித்தார். இந்தியாவில் விவசாயிகளின் வயிற்றில் மத்தியில் ஆளும் பாஜக அரசு அடிக்கிறது என்று கூறிய ப. சிதம்பரம், தலித் மக்கள் சிறுபான்மையின மக்கள் இந்தியாவில் அச்சுறுத்தலுடனேயே வாழ்கின்றனர் என்று கூறினார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை மிக மோசமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று சுட்டிக் காட்டிய சிதம்பரம், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், இன்னாள் முதல்வர் பழனிச்சாமி என இருவரும் பிரதமர் மோடியின் காலடியில் விழுந்து கிடக்கின்றனர் என்று கிண்டலடித்தார்.