விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தினால்... தமிழிசைக்கு பி.ஆர். பாண்டியன் 'வார்னிங்'
டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தை இனியும் கொச்சைப்படுத்தக் கூடாது என பி.ஆர். பாண்டியன் எச்சரித்துள்ளார்.
சென்னை: வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம், பயிர் கடன் தள்ளுபடி என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 16 நாட்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் டெல்லி சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
எச்சரிக்கை
இனியொரு முறை தமிழக விவசாயிகளின் போராட்டத்தை தமிழிசை கொச்சைப்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கிறேன். நீங்கள் உங்களுடைய விமர்சனங்களை பிரதமர் முன்னால் வையுங்கள். பாதிப்பை பிரதமரிடம் எடுத்துக் கூறுங்கள்.
மோடியிடம் சொல்லுங்கள்
கடனை தள்ளுபடி செய்து தமிழக விவசாயிகளை பாதுக்காக்க வழியை பாருங்கள். வருகிற ஆண்டாவது ஜூன் 12ம் தேதி தண்ணீரை பெற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள். வரும் ஆண்டிலாவது காவிரியில் இருந்து தண்ணீரைப் பெற்று விவசாயிகள் பிரச்சனைகள் தீர வழியை ஏற்படுத்துங்கள்.
கேள்வி கேளுங்கள்
காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவை உச்சநீதிமன்ற உத்தரவிட்டதன் அடிப்படையில் உடனடியாக அமைப்பதற்கு உங்கள் பிரதமரை நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடகத்திற்கு சார்பாக நடந்து கொண்ட மத்திய அரசை நீங்கள் கேள்வி கேளுங்கள் என்று காட்டமாக பி.ஆர். பாண்டியன் சாடினார்.
அவமானம்
முன்னதாக, விவசாயிகள் உள்நோக்கத்துடன் போராடுகிறார்கள் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை டெல்லி போராட்டத்தை விமர்சனம் செய்தார். விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் அவர் பேசியது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடையச் செய்தது குறிப்பிடத்தக்கது.