மெட்ரோ ரயில் விவகாரத்தில் வாய்க்கு வந்ததை பேட்டியாக கொடுக்கும் தமிழிசை - அமைச்சர் தங்கமணி விளாசல்!
சென்னை: மெட்ரோ ரயில் தொடக்க விழா குறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வாய்க்கு வந்ததையே பேட்டியாக அளித்து வருகின்றார் என்று சாடியுள்ளார் தமிழக தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி.
இதுகுறித்த அவரது அறிக்கை:
மெட்ரோ ரயில் தொடக்க விழாவைப் பற்றி தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அளித்த பேட்டியில், "மத்திய அமைச்சர்களை விழாவுக்கு அழைத்திருக்கலாம். இந்த ஆட்சியில் எதுவுமே ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என்று கூறியுள்ளார்.
சென்னை மெட்ரோ ரயிலை இயக்குவதற்கு பெங்களூருவில் உள்ள மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையம் மற்றும் இதர அமைப்புகள் தேவையான ஆய்வுகளை மேற்கொண்டு, சட்டப் பூர்வமான பாதுகாப்பு அனுமதியை இந்த மாதம் வழங்கினர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுவதால், தலைமைத் தேர்தல் ஆணையம், மெட்ரோ ரயில் சேவை துவக்கப்படுவது பற்றி, வாக்குப் பதிவு முடியும் வரை எந்த தகவலும் தெரிவிக்கப்படக் கூடாது என்று தெரிவித்தது. எனவே, சென்னை மெட்ரோ இரயிலின் சேவை 29ஆம் தேதியன்று துவக்கப்பட முடிவெடுத்த போதும், அது குறித்து வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
மேலும், சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் சேவை துவக்க விழாவில் மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் வெங்கையா நாயுடுவை கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் வெளிநாட்டிற்கு சென்று விட்டு அடுத்த மாதம் 11-ந் தேதி தான் இந்தியா திரும்புவதாகவும், எனவே அதுவரை இந்தத் திட்டத் துவக்க விழாவை ஒத்திப்போட வேண்டாம் என்றும் கேட்டு கொண்டார்.
மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் இந்த விழாவில் கலந்து கொள்ள இயலாததால்தான் அந்தத் துறையின் இணைச் செயலாளர் இந்த விழாவில் கலந்து கொண்டார். இதன் மூலம் ஒரு பொருள் பற்றியும் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் வாய்க்கு வந்ததையே தனது கருத்தாக பேட்டி அளிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளவர் என்பதை தமிழிசை சௌந்தரராஜன் நிரூபித்துள்ளார்
இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.