'கபாலி' நெகட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி மீண்டும் ரஜினியுடன் இணையும் பா.ரஞ்சித்!
சென்னை: 'கபாலி' எதிர்மறை விமர்சனங்களை தாண்டி மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இயக்குநர் பா.ரஞ்சித் இணைந்திருப்பது அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருந்த படம் கபாலி. உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியது.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் வாழும் தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் கபாலி படம் பலத்த எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியிருந்தது. ஆனால், படம் வெளியான பின், இப்படம் ரஜினி ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் இல்லை என்றும், வழக்கமான ரஜினி படத்தில் இருக்கும் காட்சி அமைப்புகள் இதில் இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தது.
தமிழகத்திலும் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் அளவில் பெரும் சாதனை செய்ததை யாராலும் மறுக்க முடியாது. அதேசமயம், கபாலி திரைப்படம் தலித் திரைப்படம் என்றும், பிற சமூகத்தினரை சீண்டும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன என்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
மேலும், தலித் சமுதாயம் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் பற்றி தன்னுடைய கோபத்தை, இப்படத்தின் இயக்குநர் ரஞ்சித், ரஜினிகாந்த் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் விமர்சிக்கப்பட்டது. விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்த்தவர்கள் படம் நல்லாத் தானே இருக்கு ஏன் இப்படி விமர்சிக்கிறார்கள் என கேட்டது உண்டு.
Magizchi!!!! https://t.co/ou9tuw1tc5
— pa.ranjith (@beemji) August 29, 2016
இதுதான் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து அடுத்த படத்தை இயக்க ரஞ்சித்தை ஊக்கப்படுத்தியுள்ளது. அதேசமயம், கபாலி என்ற வித்தியாசமான கதை மூலம் ரஜினியின் நடிப்பு வரலாற்றில் புதிய சகாப்தத்தை உண்டாக்கிய ரஞ்சித் இந்த முறை ரஜினியை வைத்து எந்த மாதிரி கதைக் களத்தைத் உருவாக்கப்போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பும், ஆர்வமும் அதிகரித்துள்ளது.