மோடியின் செல்ல பிள்ளையாக இருந்தும் பச்சமுத்து கைதானது எப்படி?
சென்னை: மோடியின் செல்ல பிள்ளை என்று அழைக்கப்படும் அளவுக்கு மத்திய அரசோடு நல்லிணக்கத்தோடு இருக்கும் பச்சமுத்து எப்படி கைது செய்யப்பட்டார் என்பது பலருக்கும் ஆச்சரியமே.
2014ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது பச்சமுத்துவின் ஐக்கிய ஜனநாயக கட்சி. அக்கட்சியால் வெல்ல முடியவில்லை என்றாலும் தனது ஊடக ஆதரவை பிரசார நேரத்தில் காண்பித்தார் பச்சமுத்து.
மோடியின் பதவியேற்பு விழாவிலும் பச்சமுத்து பங்கேற்றார். இதன்பிறகும், அவரது செய்தி ஊடகத்தில் பாஜக பிரமுகர்கள் விவாத நிகழ்ச்சிகளில் முக்கிய இடம் பிடித்தனர். அதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த பிற ஊடகங்களும், பாஜகவினருக்கு முக்கியத்துவம் கொடுக்க பிள்ளையார் சுழி போட்டது பச்சமுத்துவின் ஊடகம்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போன்றோர் பேட்டிகளை லைவாக ஒளிபரப்பவும் ஆரம்பித்தது அவரது ஊடகம். முக்கிய நிகழ்ச்சிகள் நடந்தால் தமிழிசையிடம் கருத்து கேட்கவும் தவறுவதில்லை.
இந்நிலையில்தான், தமிழக சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு வந்தது. பாஜகவுடன் எந்த பெரிய கட்சியும் இம்முறை கூட்டணி வைக்கவில்லை. ஆனால் பச்சமுத்து பாஜகவுடன்தான் கூட்டணி வைத்தார். இரு திராவிட கட்சிகளும் சரியில்லை என்றும் பிரசாரத்தில் கூறினார்.
இம்முறையும் அவரது கட்சி தோற்றபோதிலும், பாஜகவுடனான உறவு தொடர்ந்தது. தொடர்கிறது. மதன் விவகாரத்தில் தன்னை கைது செய்யாமல் இருக்க மத்திய அரசின் உறவு உதவும் என்றே பச்சமுத்து நினைத்திருப்பார். ஆனால் கோர்ட் தலையீடு விவகாரத்தை வேறு மாதிரி கொண்டு சென்றுவிட்டது.
மதனை கண்டு பிடித்து தரக் கோரி அவரது தாயார் தங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், மதனை 2 வாரத்துக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ இடம் வாங்கி தருவதாகத்தான் மதன் பணம் பெற்றுள்ளார் என்று 102 புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவை ஏன் விசாரிக்கக் கூடாது என்று அண்மையில் நடந்த விசாரணையில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர், பச்சமுத்துவிடமும் விசாரணை நடத்தப்படும் எனக் கூறியிருந்தார். இதையடுத்து வழக்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று பச்சமுத்துவுக்கு குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். இதன்பேரில் சென்னை எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு நேற்று மாலை பச்சமுத்து வந்தார். அவரிடம் விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர்.
இதன்பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரையில், பச்சமுத்துவை கைது செய்யாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தது காவல்துறை. காரணம், பாஜக மற்றும் மாநில அரசுடன் இணக்கமாக சென்றதுதான் என கூறப்படுகிறது. நீதிமன்றம் தலையிட்ட பிறகு வேறு வழியின்றி இப்போது பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.