அரசு மருத்துவமனையில் நாள்பட்ட வலிக்கான நிவாரண மையம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னை: நாள்பட்ட வலிக்கான நிவாரண மையம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.
அதிக வலியுடன் கூடிய புற்றுநோயாளிகள், கட்டுப்படுத்த முடியாத முதுகு வலி, கழுத்து வலி, தலைவலி, பாத எரிச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு இந்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்படும். மயக்கவியல் துறையில் இந்த நிவாரண மையம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மையத்தை தொடங்கி வைத்தார். நோயாளிகள் உடலில் பொருத்தப்பட்டு அவர்களாகவே இயக்கும் நடமாடும் வலி குறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு கருவிகள் ரூ. 50 லட்சம் செலவில் இந்த மையத்தில் பொருத்தப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை புறநோயாளிகள் பிரிவில் இந்த மையம் செயல்படும்.
மையத்தின் சிறப்பு குறித்து செய்தியாளர்களிடம் டாக்டர் ஜி.கே.குமார் பேசியதாவது:
ஒரு நபருக்கு மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கும் வலிகள் நாள்பட்ட வலி என்று கருதப்படுகிறது. உலக அளவில் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளில் 80 சதவிதத்தினர் உடலில் ஏற்படும் வலியின் காரணத்தினால்தான் மருத்துவர்களை நாடிச் செல்கின்றனர். மேலை நாடுகளில் நாள்பட்ட வலிக்கென்று பிரத்தியேக கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால் இந்தியாவில் குறிப்பாக தமிவகத்தில் இதற்கான சிகிச்சைகள் மிகவும் குறைவாக உள்ளது.
அந்தக் குறையை போக்கும் விதமாக இந்த மையத்தை தொடங்கியுள்ளோம். வேறு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் தீர்மானித்துள்ளோம் என்றார் அவர்.