மதுரை அருகே அதிமுக பஞ்சாயத்து தலைவர் வெட்டிகொலை: மர்மக்கும்பல் வெறிச் செயல்
மதுரை: மதுரை அருகே அ.தி.மு,க., பஞ்சாயத்து தலைவரை மர்மக்கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அருகே உள்ள சிலைமானை அடுத்துள்ளது கார்சேரி கிராமம். இந்த கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் கருப்பசாமி (வயது 62) அ.தி.மு.க.வை சேர்ந்த கருப்பசாமி அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு கார்சேரியில் பொது நடைபாதையில் கட்டப்பட்ட வீடு குறித்து பிரச்சினை எழுந்தது. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை ஆக்கிரமிப்பு செய்வதற்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனால் கடந்த 26ஆம்தேதி கிராம அதிகாரி மற்றும் வருவாய் ஊழியர்கள் முன்னிலையில் அந்த வீடுகள் அகற்றப்பட்டன.
வீடு அகற்றப்பட்டதற்கு பஞ்சாயத்து தலைவர் கருப்பசாமி தான் காரணம் என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் நினைத்தனர். இதனால் அவரை தீர்த்துக்கட்ட அந்த தரப்பினர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமையன்று மாலையில் கருப்பசாமியின் வீடு அருகே பதுங்கியிருந்த 6 பேர் கொண்ட கும்பல் கருப்பசாமியை சரமாரியாக வெட்டினர். கருப்பசாமியின் மகன் வீரமணியையும் அந்த கும்பல் கொல்ல முயன்றது. ஆனால் அவர் தப்பிவிட்டார்.
பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடி கருப்பசாமி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சிலைமான் போலீசார் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பஞ்சாயத்து தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.