நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினர்... நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்புகளை ஏற்றனர்
சென்னை: நேற்று முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணியினர் என அழைக்கப்படும் நாசர் தலைமையிலான அணியினர் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் பதவியேற்பு விழாவைக் கூட நடத்தாத பாண்டவர் அணியினர் முதல் காரியமாக சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க நிலத்தை ஆய்வு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியை அறிந்ததும் ஏராளமான ஊடகங்கள் அந்த இடத்தில் குவிந்தன இதனால் அந்த இடமே சற்று பரபரப்பாக காட்சியளித்தது.பின்னர் தியாகராய நகர் வடக்கு போக் சாலையில் உள்ள தற்காலிக நடிகர் சங்க கட்டிடத்திற்கு சென்ற பாண்டவர் அணியினர் அங்கு தங்கள் பதவிகளை எளிமையாக ஏற்றுக் கொண்டனர்.
நடிகர் சங்கத் தேர்தல்
நேற்று நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் சரத்குமார் அணியை தோற்கடித்து வெற்றி பெற்றனர். மொத்தம் உள்ள 29 இடங்களில் 25 இடங்களை விஷால் அணியினர் கைப்பற்றினர். சரத்குமார் அணியிலிருந்து 4 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் சங்க நிலம்
இன்று பாண்டவர் அணியினர் அனைவரும் சற்று முன்னர் 3.30 மணியளவில் தியாகராய நகரில் அமைந்திருக்கும் நடிகர் சங்க நிலத்தை ஆய்வு செய்தனர். கட்டிடம் கட்டுவது தொடர்பான ஆலோசனையில் நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன், நந்தா, எஸ்.வி.சேகர் மற்றும் கோவை சரளா ஆகியோர் ஈடுபட்டனர்.
விஷாலைத் தூக்கி
ஆய்வு நடந்து கொண்டிருக்கும்போது அங்கு வந்த இயக்குநர் எஸ்.வி.சேகர் தேர்தலில் வென்ற அனைவரையும் கட்டித் தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் ஒரே சமயத்தில் விஷால், கார்த்தி மற்றும் நாசர் ஆகியோரை தோளில் தூக்கி வைத்து நடிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நடிகர் சங்கம்
பதவியேற்பு விழாவைக் கூட நடத்தாத நிலையில் சங்கக் கட்டிடம் கட்டுவது தொடர்பாக விஷால் அணியினர் இடத்தை ஆய்வு செய்தது திரையுலகில் வியப்பு கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவர்கள் செய்வதை வைத்துப் பார்க்கும்போது விரைவில் நடிகர் சங்கக் கட்டிடம் கட்டப்படும் என்ற நம்பிக்கை திரையுலகில் எழுந்திருக்கிறது.
பதவியேற்பு
தொடர்ந்து தியாகராய நகர் வடக்கு போக் சாலையில் உள்ள தற்காலிக நடிகர் சங்க கட்டிடத்திற்கு சென்ற பாண்டவர் அணி அங்கு தங்கள் பதவிகளை ஏற்றுக் கொண்டனர். விஷால் பொதுச்செயலாளர் பதவியையும், நாசர் தலைவர் பதவியையும், கார்த்தி பொருளாளர் பதவியையும் ஏற்றுக் கொண்டனர்.பொன்வண்ணன் மற்றும் கருணாஸ் துணைத்தலைவர் பதவிகளை ஏற்றுக் கொண்டனர். மேலும் பாண்டவர் அணியைச் சேர்ந்த செயற்குழு உறுப்பினர்களும் தங்களது பதவிகளை ஏற்றுக் கொண்டனர்.மொத்தம் உள்ள 29 இடங்களில் 25 இடங்களை விஷாலின் பாண்டவர் அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.பின்னர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த நாசர் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என்று கூறினார்.
பெயர் மாற்றம்
நடிகர் சங்கத்தின் பெயர் மாற்றம் தொடர்பாக பதிரிக்கையாளர்கள் கேள்வி கேட்டபோது இதனை உடனடியாக முடிவு செய்ய முடியாது. உறுப்பினர்களை கலந்து ஆலோசித்து இது தொடர்பான முடிவை எடுப்போம் என்று தெரிவித்தார்.
தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன்
இந்நிலையில் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் மற்றும் அவரது தலைமையிலான தயாரிப்பாளர்கள் நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணிக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து இருக்கின்றனர்.