ஆவடியில் மாபா பாண்டியராஜனுக்கு வெற்றி வாய்ப்பு - நியூஸ் 7 கருத்துக்கணிப்பு
சென்னை: ஆவடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மாபா பாண்டியராஜன் வெல்லும் வாய்ப்புள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு கூறுகின்றது.
ஆவடி தொகுதி அதிமுக வேட்பாளராக தேமுதிகவில் இருந்து வந்த மாபா பாண்டியராஜன் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த 2011 சட்டசபை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாண்டியராஜன்.
பிறகு பதவி முடியும் தருவாயில் பாண்டியராஜன் உள்பட 10 தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டனர். பின்னர் பாண்டியராஜன் உள்பட 10 பேரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, அனைவரும் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதில் பாண்டியராஜனுக்கு மட்டுமே அதிமுக சார்பில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது.
ஆவடி தொகுதியில் உழைத்த கட்சி நிர்வாகிகளில் ஒருவருக்கு சீட் வழங்காததால் அதிமுகவினர் அதிருப்தியில் இருந்தபோதிலும் பாண்டியராஜன் வெல்லும் நிலை உள்ளதாக நியூஸ் 7 கருத்துக்கணிப்பு தினமலர் கருத்துக்கணிப்பு கூறுகின்றது.
இக்கருத்துக் கணிப்பின்படி அதிமுகவுக்கு இங்கு 46.5 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது. திமுகவுக்கு 28.2 சதவீத ஆதரவு காணப்படுகிறது. தேமுதிக - ம.ந.கூட்டணி 12.3 சதவீதத்துடன் 3வது இடத்தில் உள்ளது. பாமகவுக்கு 4.6 சதவீத ஆதரவுடன் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பாஜக 2.7 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.