கலிங்கப்பட்டியில் போலீஸாரைக் குவித்தது தவறு... பண்ருட்டி வேல்முருகன் கண்டனம்
சென்னை: கலிங்கப்பட்டியில் நூற்றுக்கணக்கான போலீஸாரைக் குவித்தது தவறு. அங்குள்ள மதுக் கடையை மூடியிருக்கலாம், இவ்வளவு பெரிய அசம்பாவிதத்தைத் தவிர்த்திருக்கலாம். போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியது, தடியடி நடத்தியது தவறு என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலர் வைகோ அவர்களது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் மதுக்கடைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினர் தடியடி நடத்தி கண்ணீர்புகை குண்டுகளை வீசியிருப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டிக்கிறது.
கன்னியாகுமரியில் மதுக்கடையை அகற்றக் கோரி போராட்டம் நடத்திய நிலையில் காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிராக தன்னெழுச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கலிங்கப்பட்டியில் வைகோ அவர்களின் தாயார் மரியாதைக்குரிய மாரியம்மாள் அவர்கள் 94 வயதிலும் மதுக்கடையை மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தப் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்களும் கலந்து கொண்டு மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வைகோ அவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் நேற்று மதுக்கடையை அகற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்குமான சிறு தள்ளுமுள்ளை பயன்படுத்தி உணர்ச்சிவசயப்பட்ட காவல்துறையினர் தடியடி நடத்துவதும் கண்ணீர்புகை குண்டுகளை வீசுவதும் கண்டனத்துக்குரியது. நேற்று முன்தினம் முதலே போராட்டம் நடத்தி வரும் நிலையில் கலிங்கப்பட்டியில் இந்த கடையை நேற்று மூடியிருந்தால் இந்த அசம்பாவிதத்தை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகாலம் அரசியல் ஆளுமையாக திகழும் திரு. வைகோ அவர்களது தலைமையிலான எந்த ஒரு போராட்டத்திலும் நிகழ்ச்சியிலும் ஒரு துளி வன்முறையும் நிகழ்ந்தது இல்லை. அதுவும் வைகோ அவர்களின் தாயார் தலைமையேற்றுகிற நடத்துகிற போராட்டத்தை சீர்குலைக்க நூற்றுக்கணக்கில் போலீசாரைக் குவித்ததே முதல் தவறு.
தற்போது தடியடி, கண்ணீர்புகை குண்டுகளை போராட்டக்காரர்கள் மீது வீசியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. இந்த அசம்பாவிதங்களை காவல்துறையால் நிச்சயம் தவிர்த்திருக்கவும் முடியும்.
பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள் என பொதுமக்கள் கூடும் இடங்களில் இருந்து முதலில் மதுக்கடைகளை அப்புறப்படுத்திவிட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்தியாக வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கையாகும்.
இந்தக் கோரிக்கையை முன்வைத்து நடத்தப்படும் போராட்டங்களை அலட்சியப்படுத்தாமலும் அத்துமீறாமலும் அமைதியான வழியில்தான் காவல்துறை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமே தவிர இத்தகைய பலப்பிரயோகங்களை பயன்படுத்துவதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
ஆகையால் மதுவிலக்கு கோரி நடத்தும் மக்கள் போராட்டங்களை மிகவும் கவனமாக கையாளவேண்டியது போலீசாரின் பெரும் பொறுப்பு என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.