பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து
பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த மாரியப்பன் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தார்.
கடந்த ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தற்கு இந்தியா முழுவதும் இருந்து அவருக்கு பாராட்டு மற்றும் பரிசு மழை கொட்டியது.
இதனைத் தொடர்ந்து அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்க மத்திய அரசு அறிவித்து. இது பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு மேலும் மரியாதை சேர்த்தது. கடந்த வாரம் ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில், மாரியப்பன் தங்கவேலுவிற்கு பத்ம ஸ்ரீ விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து இன்று சென்னை வந்த மாரியப்பன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.