எஸ்.ஆர்.எம் மெடிகல் காலேஜில் சீட் வாங்கி தருவதாக ரூ.52 லட்சம் மோசடி: மதன் மீது போலீஸில் புகார்
சென்னை: எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரியில் படிக்க சீட் வாங்கித் தருவதாக கூறி வேந்தர் மூவிஸ் மதன் ரூ.52 லட்சம் மோசடி செய்து விட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மதன். இவர் பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் வேந்தர் மூவிஸின் லெட்டர் பேடில் மதன் எழுதியதுபோல ஒரு கடிதம் வெளியாகியுள்ளது.
காசிக்கு சென்று கங்கையில் சமாதி அடையப் போவதாக அந்த கடிதத்தில் மதன் கூறியுள்ளார். மேலும் எஸ்ஆர்எம் கல்லூரி தொடர்பாகவும் சில தகவல்களை அவர் எழுதியுள்ளார். இது அவர் எழுதிய கடிதம் தானா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேடுதல் வேட்டை
மதன் குடும்பத்தினரும் நண்பர்களும் மதனைத் தேடி காசிக்கு சென்றுள்ளார்கள். அங்குக் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேடுதல் வேட்டையில் அம்மா கிரியேஷன்ஸ் சிவாவும் நடிகர் ராகவா லாரன்ஸூம் இணைந்துள்ளார்கள். ராகவா லாரான்ஸ் நடித்து வந்த மொட்டை சிவா கெட்ட சிவா படத்தை தயாரித்து வந்தார் மதன்.
திரையுலகில் பரபரப்பு
வாரணாசியில் மதன் தங்கியிருந்த விடுதி பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் அங்கும் அவர் காணப்படவில்லை. இதனால் 5 படகுகள் அமைத்து கங்கை நதியிலும் அவரைத் தேடிவருகிறார்கள். மதனின் நிலைமை தெளிவாகத் தெரியப்படாததால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதன் மீது மோசடி புகார்
இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த ரா.வெங்கடேசன், 52 என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனுவைக் கொடுத்தார். அதில், எனது மகன் ஆகாஷ் சிவன் பிளஸ் 2 முடித்தார். இதைத் தொடர்ந்து காட்டாங்கொளத்தூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவ கல்லூரியில் அவனைச் சேர்ப்பதற்காக கடந்த 27-02-2016 அன்று வேந்தர் மூவிஸ் மதனை சந்தித்தேன்.
ரூ.62 லட்சம் பணம்
மருத்துவ சீட் வாங்கித்தர மதன் ரூ.62 லட்சம் கேட்டார். மதனிடம் நான் ரூ.52 லட்சம் கொடுத்தேன். பின்னர் 11-03-2016 அன்று ரூ.10 லட்சம் கொடுத்தேன். இந்நிலையில் பிளஸ் 2 தேர்வில் எனது மகன் கட்-ஆப் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் மதனை தொடர்பு கொண்டு கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டேன்.
தொடர்பு எல்லைக்கு அப்பால்
வடபழனி அலுவலகத்துக்கு சென்று தனது தம்பி சுதிரிடம் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு மதன் கூறினார். 23-05-2016 அன்று வடபழனி அலுவலகத்துக்கு சென்று சுதிரை சந்தித்தபோது, அவர் ரூ.10 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்தார்.
இதுபற்றி மதனிடம் கேட்டபோது 30-ம் தேதி வந்து மீதிப்பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறினார்.
பணமோசடி
நான் சென்னை வந்து மதனை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மருத்துவ கல்லூரிக்கு சென்று கேட்டபோது, பொறுமையாக இருங்கள் பணத்தை திருப்பி கொடுக்கிறோம் என்று கூறுகின்றனர்.
பல மாணவர்கள் ஏமாந்தனர்
என்னைப்போல பலர் மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்து வந்திருந்தனர். எனவே வேந்தர் மூவிஸ் மதன் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திரும்ப பெற்றுக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மாயமான மதன் மீது மோசடி புகார் கூறப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
யார் இந்த மதன்
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்தரத்தை சேர்ந்தவர் மதன். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்த மதன் பொறியியல், மருத்துவ கல்லூரிகளில் சீட் வாங்கிக்கொடுக்கும் புரோக்கர்களுடன் ஒட்டிக்கொண்டு பணம் வாங்கினார். ஆரம்பத்தில் சீட் வாங்கிக்கொடுக்க முடியாமல் மோசடி புகாரில் கைதானார்.
எஸ்.ஆர். எம் கல்லூரியில் தொடர்பு
எஸ்.ஆர்.எம்.எம் கல்லூரியில் ஏற்பட்ட தொடர்பு காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து மாணவர்களை அழைத்து வந்து மருத்துவக்கல்லூரிகளில் சேர்த்து விட்டார். இதில் கிடைத்த பணத்தை கொண்டுதான் வேந்தர் மூவிஸ் என்ற திரைப்பட நிறுவனத்தை தொடங்கினார்.
திரைப்பட தயாரிப்பில் நஷ்டம்
விஜய் நடித்த தலைவா, ரஜினி நடித்த லிங்கா திரைப்படம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்தார். சில திரைப்படங்களை சொந்தமாக தயாரித்தார். இதில் நஷ்டம் ஏற்பட்டது. இந்த பணம் எல்லாம் மாணவர்களிடம் வாங்கிய பணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பண மோசடி புகார்
மாணவர்களிடம் வாங்கிய பணத்தில் படம் தயாரித்த மதன் தொழிலில் நஷ்டம் அடைந்து விட்டதாக கூறப்படுகிறது. எனினும் பணம் வாங்கிய மாணவர்களுக்கு சீட் கொடுத்து ஆகவேண்டிய கட்டாயத்தில் எஸ்.ஆர்.எம். நிறுவனம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவேதான் எஸ்.ஆர்.எம். நிறுவனத்திற்கும் மதனுக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தலைமறைவு நாடகம்
மாணவர்களின் பெற்றோர்கள் ஒருபக்கம் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், எஸ்.ஆர்.எம். நிறுவனர் பாரிவேந்தரிடமும் மதனுக்கு உறவில் விரிசல் ஏற்படவே அவர் தலைமறைவாகி விட்டார். இது நாடகம் என்றும் ஒருபக்கம் பேசப்படுகிறது.
ஐஜேகேவில் மதன்
பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சியில் இருந்த மதன் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வியடைந்தார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், இந்திய ஜனநாயகக் கட்சியில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் மதன் நீக்கப்பட்டு விட்டதாக பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
மிரட்டல் நாடகம்
மதன் எழுதிய கடிதம் திட்டமிட்ட மிரட்டல் நாடகம் என்பதால், அதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் கடந்த திங்கட்கிழமை புகார் அளித்திருப்பதாகவும் பாரிவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்பு இல்லை
தன்னிச்சையாக மதன் செய்துள்ள மோசடிகளுக்கும், தங்களது நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாரிவேந்தர் விளக்கம் அளித்துள்ளார். மாயமான மதன் வெளியே வந்தால் மட்டுமே உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று கூறுகின்றனர் திரைப்படத்துறையினர்.