அடக் கடவுளே, டியூஷன் பீசுக்கும் ஜிஎஸ்டியாம்... "ஷாக்"கான பெற்றோர்!
ஜிஎஸ்டி வரியால் மாணவர்களுக்கான டியூஷன் கட்டணமும் உயர்ந்துள்ளது பெற்றோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சென்னை : ஜிஎஸ்டி வரிஉயர்வு உடனடியாக கல்வித்துறையில் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளதால் கல்விக்கட்டணம் அதிகரித்துள்ளது, இதில் கொடுமை என்னவென்றால் டியூஷன் கட்டணமும் அதிகரித்துள்ளது பெற்றோருக்கும் மேலும் சுமையை கூட்டியுள்ளது.
நாடு முழுவதும் ஒரே வரி முறை அறிவிக்கப்பட்டதில் என்னென்ன சாதக பாதகங்கள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு 4 மாதங்கள் ஆகும் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர். ஆனால் ஜிஎஸ்டி வரியால் கல்விக்கட்டணம் எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பது மட்டும் உடனடியாக தெரிந்துவிட்டது.
ஜிஎஸ்டியிலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விலக்கு என்று தான் அரசு கூறியிருந்தது. ஆனால் சென்னையில் உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று ஜூன் மாதமே நன்கொடையாக ரூ.2 லட்சத்தை வாங்கிக் கொண்டு கல்விக்கட்டணம் ரூ.1.60 லட்சம் ஆண்டுக்கு என்று சொல்லியுள்ளது. இந்த கட்டணத்தை ஆகஸ்ட் முதல் வாரத்தில் கட்டலாம் என்றும் கூறியுள்ளது.
கல்லூரி கட்டணத்திற்கும் ஜிஎஸ்டி
ஆனால் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தவுடன் கல்லூரி கட்டணத்திற்கும் வரி போட்டுவிட்டார்களாம். ரூ.1.72 லட்சம் கட்டணமாக கேட்டுள்ளது கல்லூரி. அதற்கு அவர்கள் சொன்ன காரணம் ஜிஎஸ்டி. மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி சட்டத்தில் வணிக ரீதியில் டியூஷன் நடத்தும் நிறுவனங்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.
சுடுதல் சுமை
இதனால் சிறப்பு பயிற்சி எடுத்துக் கொள்ளும் மாணவர்களுக்கான கட்டணத்தில் 18 சதவீதம் வரி சேர்க்கப்படுகிறது. நீட், ஜேஇஇ, ஐஐடி போன்ற நுழைவுத் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் கூடுதல் பயிற்சி வகுப்புகளுக்கு செல்வது கட்டாயமாகியுள்ள நிலையில் இந்த வரி விதிப்பு பெற்றோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோருக்கு பேரிடி
ஒரு மாணவன் டியூஷன் கட்டணமாக ரூ.10 ஆயிரம் செலுத்தி வந்தால், ஜிஎஸ்டி அமலானதற்கு பின்பு ரூ.1,800 வரியும் சேர்த்து செலுத்த வேண்டும். இது நிச்சயம் நடத்தர வர்க்க பெற்றோருக்கு பேரிடியான அறிவிப்பு
குறைக்குமா அரசு?
ஏற்கனவே குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் சிக்கித் தவிக்கும் நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் பிள்ளைகளின் கல்விக் கனவை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு மத்திய அரசிடம் இருந்து டியூஷன் கட்டணத்திற்கு விலக்கு பெற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் பெற்றோர்.