சாப்பாடு தரச் சென்றபோது மான் குத்தித் தாக்கியதில் பூங்கா ஊழியர் பலி
குமரி: தக்கலை அருகே உதயகிரிகோட்டை பூங்காவில் மான் கொம்பால் குத்தியதில் உணவு அளிக்கச் சென்ற ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உதயகிரிகோட்டையில் பூங்கா ஒன்று உள்ளது. இங்கு திறந்த வெளியில் கம்பி வேலிகள் அமைத்து மான்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பெரிய கொம்புகளுடன் உள்ள மான்கள் முதல் சிறிய மான்கள் வரை சுமார் 30-க்கும் மேற்பட்டவை இந்தப் பூங்காவில் வசித்து வருகின்றன.
கூடவே, இந்தப் பூங்காவில் பொழுதுபோக்கு அம்சத்துக்குரிய விளையாட்டு உபகரணங்களும் உள்ளதால், தினமும் இந்த பூங்காவிற்கு ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.
இங்குள்ள மான்களுக்கு உணவு தரும் வேலையை புலியூர்குறிச்சி ஆசான்கிணறு பகுதியை சேர்ந்த மாதவன் பிள்ளை (57) என்ற வனஊழியர் கவனித்து வந்தார்.
இவர் வழக்கம்போல், நேற்று காலையும் மான்களுக்கு உணவு அளிப்பதற்காக வேலிப்பகுதிக்குள் சென்றுள்ளார். மாதவன்பிள்ளை கை நிறைய இலை, தழைகளை உணவாகக் கொண்டு வருவதைப் பார்த்து மான்கள் கூட்டம் அவரை நோக்கி பாய்ந்து வந்தது.
அப்போது, பெரிய மான் ஒன்று, எதிர்பாராத நேரத்தில் மாதவன்பிள்ளையை வயிற்றில் குத்தியது. இதில் பலத்த காயமடைந்தார் மாதவன். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மற்ற ஊழியர்கள், அவரை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனடியாக இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
உணவு அளிக்கச் சென்ற பூங்கா ஊழியர் மான் குத்தியதில் உயிரிழந்த சம்பவம், அங்கிருந்த மற்ற ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.