உணவுப் பாதுகாப்பு...மதுரைக்கு ஆய்வுக்கு வந்த நாடாளுமன்ற நிலைக்குழு - வீடியோ
உணவு பாதுகாப்பு மற்றும் பொதுவிநியோகத் திட்டம் குறித்து ஆய்வு செய்ய ஜெ.சி திவாகர் ரெட்டி எம்.பி தலமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு மதுரை வந்துள்ளது.
மதுரை: மதுரையில் உணவுப் பாதுகாப்பு, பொதுவிநியோகத் திட்டம் உள்ளிட்ட துறைகளை ஆய்வு செய்ய ஜே.சி. திவாகர் ரெட்டி எம்.பி தலைமையில் 17 பேர் கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு மதுரைக்கு வந்துள்ளது. அவர்களை மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வரவேற்றார்.
தமிழ்நாட்டில் கடந்த சிலமாதங்களாக பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் பல நாட்களாக வழங்கப்படவில்லை என்று திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. இதற்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், அனைத்துப் பொருட்களும் தேவையான அளவு கையிருப்பில் இருக்கிறது என்று கூறினார்.
ஆனால் சரிவர பொருட்களை கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள் என்று பொதுமக்கள் கூறிவந்தனர். இந்த நிலையில், மதுரையில் பொதுவிநியோகத் திட்டம், உணவுப் பாதுகாப்பு, உணவுப்பொருட்களில் கலப்படம் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்ற நிலைக் குழு மதுரை வந்துள்ளது.
இக் குழுவில் 17 பேர் இடம்பெற்றுள்ளனர். ஜே.சி திவாகர் ரெட்டி எம்.பி தலைமையில் இந்த குழு ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பிக்கும்.