நெல்லை அருகே ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சி.. பயணியின் கை-கால் பறிபோனது!
நெல்லை: செங்கோட்டையில் ரயிலுக்கு அடியில் சிக்கிய பயணியின் ஒரு காலும், ஒரு கையும் துண்டானது. ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய போது இந்த விபரீதம் நடந்தது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சொரிமுத்து. இவர் நெல்லையில் இருந்து புறப்படும் செங்கோட்டை பயணிகள் ரயிலில் ஏறி செங்கோட்டைக்கு வந்தார். செங்கோட்டை ரயில் நிலையத்துக்குள் 2வது நடைமேடைக்கு ரெயில் வந்து கொண்டு இருந்தது. ஆனால் ரயில் நிற்பதற்குள்ளேயே சொரிமுத்து ரெயிலில் இருந்து வேகமாக இறங்க முற்பட்டுள்ளார்.
அப்போது, கால் தவறி தண்டவாளத்திற்கும், ரயிலுக்கும் நடுவே சிக்கிக் கொண்டார். ரயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த பயணிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து ரயிலை நிறுத்தும்படி கூச்சலிட்டனர். உடனே ரயில்வே போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ரயில் நிறுத்தப்பட்டதும் பொதுமக்களும், போலீசாரும் சேர்ந்து விபத்தில் சிக்கிய சொரிமுத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில் அவருக்கு ஒரு காலும், ஒரு கையும் துண்டாகி இருப்பது தெரியவந்தது. படுகாயங்களுடன் கிடந்த சொரிமுத்தை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.