8 மாதமாக கூலி கொடுக்காத ஊராட்சி... சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள்!
நூறு நாள் வேலைத் திட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கடந்த 8 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதனால் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை: அம்பாசமுத்திரம் ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்த கூலித் தொழிலாளர்களுக்கு கடந்த எட்டு மாதமாக ஊதியம் வழங்கப்படாததை எதிர்த்து தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் அம்பாசமுத்திரத்திலுள்ள 12 ஊராட்சிகளில் தொழிலாளர்கள் பல்வேறு வேலைகளைச் செய்தனர். இவர்களுக்கு வாரம்தோறும் சம்பளப் பணம் வங்கியில் செலுத்தப்படும்.
அவர்களுக்கு கடந்த 2017 மார்ச் 31ம் தேதி வரை தினசரி ஊதியமாக ரூ.203ம், ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ.205ம் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டு வாரந்திர அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இவர்கள் இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
அதையடுத்து தொழிலாளர்கள், அயன்சிங்கப்பட்டி பஞ்சாயத்து அலுவலத்தை முற்றுகையிட்டனர்.மேலும் பேருந்தை சிறைபிடித்து, சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
அதன்பிறகு அவர்களிடம் அம்பை வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசன் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பளப் பணம் விரைவில் வங்கியில் சேர்க்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.