அரசியலுக்கு வாங்க... ரஜினி, சகாயத்திற்கு பழ.கருப்பையா அழைப்பு
திருப்பூர்: ரஜினி, சகாயம் போன்றோர் அரசியலுக்கு வரவேண்டும் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. பழ கருப்பையா அழைப்பு விடுத்துள்ளார்.
துறைமுகம் சட்டசபைத் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பழ. கருப்பையா. இவர் சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தனது எம்.எல்.ஏ பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார் கருப்பையா.
அதனைத் தொடர்ந்து சிலர் பழ.கருப்பையா வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக ரஜினி போனில் நலம் விசாரித்தார்.
இந்நிலையில், திருப்பூரில் நடைபெற்ற 13-வது புத்தக திருவிழா கருத்தரங்கில் கலந்து கொண்டு ‘அரசியல் அறம்' என்ற தலைப்பில் பேசினார் பழ.கருப்பையா.
அறம்...
அப்போது அவர், "இன்றைக்கு அறம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மனிதனை அறம் உடையவனாக ஆக்கியிருந்தால் அவன் ஒழுங்குபட்டிருப்பான். ஆனால் சட்டத்துக்கு பயப்படுகிறவர்களாக உருவாக்கி இருக்கிறோம்.
தொழிலாக மாறிய அரசியல்...
இன்றைக்கு அரசியல் என்பது தொழிலாகி விட்டது. அரசியலுக்கு வரும் போது, பதவியை பிடிக்க வேண்டும் என்று தான் வருகிறார்கள்.
லஞ்ச வாழ்க்கை...
லஞ்சம் இன்றைக்கு வாழ்க்கை முறையாக மாறி விட்டது. காமராஜர் இறந்த போதே மரணம் அடைந்திருக்க வேண்டும் அல்லது அரசியலை விட்டு விலகியிருக்க வேண்டும்.
நேர்மைக்கு பரிசு...
நேர்மையாக நடக்கிற ஒருவன் ஒதுக்கப்படுகிறான். சட்டத்தை சார்ந்து இருக்கும் அரசியல் தோற்கும்.
ஒலிக்கற்பு...
ஆனால் அறத்தை தாங்கி நிற்கும் அரசியல் தோற்காது. அரசியல்வாதிகள் எதையும் மக்களுக்கு உணர்த்துவதில்லை. இதனால் மக்கள் அரசியலை வெறுக்கிறார்கள். தமிழுக்கு ஒலிக்கற்பு இருப்பதால் மொழி சிதையாமல் இருக்கிறது" என இவ்வாறு பேசினார்.
யோசித்து முடிவு...
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பழ.கருப்பையாவிடம், ‘நீங்கள் எந்த கட்சியில் சேர இருக்கிறீர்கள்?' எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "தேர்தலுக்கு முன்பு அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் யோசித்து முடிவு செய்வேன். என் வீடு மீது நடந்த தாக்குதலில் குற்றவாளிகளை தப்ப விட்டு விட்டனர்" என்றார்.
ரஜினி...
மேலும், ‘ரஜினிகாந்த், சகாயம் போன்றவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். ஆனால் அவர்கள் அரசியலுக்கு வர மறுக்க காரணம் என்ன என்பது தெரியவில்லை. மையப்படுத்தி ஊழல் செய்வது என்ற முறையை கண்டறிந்தது அ.தி.மு.க. தான்' என இவ்வாறு பழ.கருப்பையா தெரிவித்தார்.