சிக்கென்று ஸ்லிம்மாகி சிம்ரன் போல திரும்பிய பழனி "கஸ்தூரி:...!
பழனி: யானைகள் புத்துணர்வு முகாமுக்குச் சென்று திரும்பியுள்ள பழனி கோவில் யானை கஸ்தூரி 110 கிலோ எடை குறைந்து ஸ்லிம்மாகி திரும்பியுள்ளதால் யானையும் சரி, அதைப் பார்க்க வரும் பக்தர்களும் சரி குஷியாகியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் யானைகளுக்கும் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரம் சிறப்பு முகாம் கடந்த டிசம்பர் 11 ம் தேதி தொடங்கியது. 30 யானைகள் கலந்து கொண்ட இந்த முகாம் நிறைவடைந்து அனைத்து யானைகளும் திரும்பி விட்டன. பல யானைகள் முகாமிலிருந்து திரும்பவே மனம் இல்லாமல் அன்ன நடை போட்டு வண்டியில் ஏறியதாம்.
முகாமின் போது அந்த யானைகளுக்கு பிடித்தமான உணவு தானியங்கள், பசும் தீவனங்கள் வழங்கப்பட்டதுடன் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை, உடற்பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த யானைகளில் ஒன்றுதான் கஸ்தூரி. பழனி கோவில் யானை. அது நேற்று காலை திரும்பியதும் பழனியில் தைப்பூச விழா கொடியேற்றம் நடைபெற்றதும் சிறப்பு அம்சமாக அமைந்தது. முகாம் சென்று திரும்பிய கோவில் யானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய நாயகி அம்மன் கோவிலுக்கு பழனி தேவஸ்தானம் சார்பில் அழைத்து வரப்பட்டது.
அதன்பின் கோவிலை வலம் வந்து சாமி தரிசனம் செய்தது. கடந்த ஆண்டு தைப்பூச திருவிழாவின்போது யானை கஸ்தூரி பங்கேற்கவில்லை. ஆனால் இந்த திருவிழாவின்போது கோவில் யானை பங்கேற்றது பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
முகாமிற்கு செல்வதற்கு முன் கஸ்தூரியின் எடை 4290 கிலோ இருந்தது. முகாம் சென்று திரும்பிய பின்னர் தற்போது 110 கிலோ எடை குறைந்து இருந்தது. இருந்தபோதும் யானை ஆரோக்கியமாக இருப்பதாக அதனை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர். தினமும் நடைபயிற்சி அளிக்கப்பட்டு சத்தான உணவு அளிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.