நிலக்கடலை சாப்பிடுங்க நீண்ட நாள் வாழலாம்! மாரடைப்பும் வராதாம்!!
சென்னை: நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள் நீண்ட நாள் வாழலாம் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
நிலக்கடலை அல்லது வேர்க்கடலை என்று அழைக்கப்படும் இந்த கடலையை சாப்பிடாதவர்கள் யாருக்கம் இருக்க முடியாது. பேருந்து நிலையங்களிலும் தள்ளுவண்டியிலும் எண்ணற்றோர் விற்பனை செய்கின்றனர். பசிக்கு எளிய உணவாகவும் இருக்கிறது வேர்க்கடலை.
மாமிசம், முட்டை, காய்கறிகளைவிட வேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம். நிலக்கடலை உலகெல்லாம் பரவியது பதினாறாம் நூற்றாண்டில்தான். இதன் தாய் நிலம், பிரேசில். அங்கிருந்து போர்ச்சுகீசியர் பல்வேறு நாடுகளுக்கு இதனை எடுத்துச் சென்றனர். இந்தியாவிலும் விருந்தாளியாய் வேர்விட்டது வேர்க்க்கடலை!
நோய் நீக்கும் வல்லமை
உடல் குளிர்ச்சியால் ஏற்படும் ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் போன்ற நோய்கள் ஓடிவிடும். நெஞ்சு சளியினை நீக்கும் வல்லமையும் கொண்டது வேர்க்கடலை என்கின்றனர் நிபுணர்கள்.
எண்ணெய் சத்து
சக்தி, புரதம், பாஸ்பரஸ், தையாமின், நையாசின் ஆகிய ஐந்து சத்துக்கள் கொண்ட அற்புத மருத்துவக் குணத்துடன் விளங்குகிறது வேர்க்கடலை. இதில் உள்ள எண்ணெய்ச் சத்து, எளிதில் ஜீரணமாகக்கூடியது.
நோய் எதிர்ப்பு சக்தி
சிறந்த மலமிளக்கியாகவும் சருமத்துக்குப் பளபளப்பூட்டக்கூடியதாகவும் விளங்குகிறது. இது வளரும் குழந்தைகளுக்கும், கருத்தரித்துள்ள பெண்களுக்கும், தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்களுக்கும் அருமருந்து. பல தொற்றுநோய்கள், ஹெபடைடிஸ், காசநோய் ஆகியவற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ளத் தேவையான எதிர்ப்பு சக்தியை வேர்க்கடலை அளிக்கிறது.
எப்படி சாப்பிடணும்
வேர்க்கடலையைத் தண்ணீரில் ஆறு முதல் எட்டு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிகட்டிவிட்டுச் சாப்பிடுவதே சிறந்ததாகும். வேர்க்கடலையைக் கஞ்சியாக்கி, வாழைப்பழம், தேன் சேர்த்துச் சாப்பிடுவதால், குழந்தைகள் பலம் பெறுவார்கள் என்கின்றனர் நிபுணர்கள். .
பெண்களுக்கு நன்மை
ஹீமோஃபீலியா என்ற நோயில் அவதிப்படுபவர்களுக்கு அடிபட்டால் அவ்வளவு எளிதில் ரத்தம் உறையாது. அதனைக் குணப்படுத்தவும், பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கில் இருந்து குணமடையவும், நீரிழிவு நோயாளிகளுக்கும் வேர்க்கடலை சிறந்த உணவாகும்.
அமெரிக்காவில் ஆய்வு
அமெரிக்காவில் உள்ள வேண்டர்பில்ட் பல்கலைக்கழகமும் சீனாவில் உள்ள ஷாங்காய் புற்றுநோய் அமைப்பும் இணைந்து புதிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டன. ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய வழித்தோன்றல்கள் சுமார் 70 ஆயிரம் பேரும், சீனர்கள் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பேரும் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்.
சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் மக்களிடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் 'ஜே.ஏ.எம்.ஏ. இன்டர்னல் மெடிசின்' எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளன.
ஊட்டச்சத்துக்கள்
நிலக்கடலையில் நிறைவுறா கொழுப்பு அமிலம், நார்ச்சத்து, வைட்டமின்கள், பினோலிக் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், பைடோகெமிக் கல்ஸ் உள்ளிட்ட நிறைய ஊட்டச் சத்துகள் உள்ளன. இவை அனைத்துமே இதய நலத்துக்கு நன்மை செய்பவை என்று ஆய்வு குறித்து வேண்டர் பில்ட் இன்கிராம் புற்றுநோய் மையத்தில் துணை இயக்குநராக உள்ள சியா ஓ ஷூ கூறியுள்ளார்.
அடித்தட்டுமக்கள்
இதற்கு முன்பு இதுபோன்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அவை அனைத்துமே வருவாய் அதிகம் உள்ள மக்களிடையே தான் நடத்தப்பட்டுள்ளன. இந்தப் புதிய ஆய்வில் கருப்பர்கள், வெள்ளையர்கள், ஆசியர்கள் என பல இன மக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
மாரடைப்பு வராது
இந்த ஆய்வின் மூலம் நிலக்கடலையைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் 23 முதல் 38 சதவீதம் வரை குறைகின்றன என்பது தெரியவந்துள்ளது.
விலை கம்மி... நன்மை நிறைய
பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு போல நிலக்கடலையின் விலை அதிகம் இல்லை. பத்து ரூபாய்க்கு பாக்கெட் நிறைய கிடைக்கிறது. தவிர அது பல இடங்களிலும் எளிதாக கிடைப்பதால் பலரும் அதைத் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். நிலக்கடலையைத் தொடர்ந்து பயன்படுத்த நாம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், மக்களின் இதய நலத்தை மேம்படுத்தலாம். என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.