கேரவனுக்கு அனுமதியின்றி மின்சாரம் எடுத்த நடிகர் தனுஷ்.. அபராதம் விதித்தது மின்சார வாரியம்!
தேனி அருகே நடிகர் தனுஷ் கேரவனுக்கு அனுமதியின்றி மின்சாரம் எடுத்ததால் அபராதம் விதிக்கப்பட்டது.
தேனி: நடிகர் தனுஷ் கேரவனுக்கு அனுமதியின்றி மின்சாரம் எடுத்ததையடுத்து அபராதம் விதிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள முத்துரெங்காபுரம் கிராமத்தில் கஸ்தூரி அங்கம்மாள் கோவில் உள்ளது. குலதெய்வ கோவில் என்பதால், ஆடிப்பெருக்கை முன்னிட்டு நடிகர் தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா, தனுசின் தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜா, தாய் விஜயலட்சுமி ஆகியோர் முத்துரெங்காபுரம் கிராமத்திற்கு சென்றனர்.
அவர்கள் வருகையை முன்னிட்டு முன்கூட்டியே கேரவன் முத்துரெங்காபுரம் கிராமத்தில் நிறுத்தப்பட்டது. இந்த கேரவனுக்கு கிராமத்தில் உள்ள ஒரு மின்கம்பத்தில் இருந்து அனுமதியின்றி இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை மின்சாரம் முறைகேடாக எடுக்கப்பட்டதாக மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
இதையடுத்து அங்கு சென்ற மின்வாரிய அதிகாரிகள் கேரவனின் டிரைவர் மற்றும் நடிகர் தனுஷ் உடன் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அனுமதியின்றி மின்சாரம் எடுத்து பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் கேரவன் உரிமையாளருக்கு 17500 ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த சம்பவத்தால் முத்துரெங்காபுரம் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.