மாணவியை சீண்டிய ஆசிரியரை எங்களிடம் ஒப்படையுங்கள்.. ஆக்ரோஷ மக்கள் மறியலால் போலீஸ் தடியடி
பவானியில் 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் கைது செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பவானி: பவானியில் பூதப்பாடி அரசு பள்ளியில் பாலியல் தொல்லையால் கைது செய்யப்பட்ட ஆசிரியரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கிராம மக்கள் மறியல் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தினர்.
பூதப்பாடியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது மாணவி மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவே கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்களும், மாணவியின் உறவினர்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சாலை மறியல்
தகவலறிந்த போலீஸார் பள்ளிக்கு வந்து அங்குள்ள மற்ற ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியருக்கும் பாதுகாப்பு வழங்கினர். இதனிடையே ஆசிரியரை கைது செய்யக் கோரினர். தகவலறிந்த கோபி வருவாய் கோட்டாட்சியர், அந்தியூர் வட்டாட்சியர், கல்வி துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆசிரியர் கைது
மக்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் பிரபுவை போலீஸார் கைது செய்தனர். இருப்பினும் தங்களிடம் அவரை ஒப்படைக்க வேண்டும் என்று உறவினர்கள் அம்மாபேட்டையில் பவானி- மேட்டூர் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியரை ஒப்படைக்க வேண்டும்
இதுகுறித்து மக்கள் கூறுகையில், கைது செய்யப்பட்ட ஆசிரியர் 15 நாள்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு பின்னர் 5 அல்லது 6 ஆண்டுகளில் வழக்கிலிருந்தும் வெளியே வந்துவிடுவார். இதனால் அவர் செய்த தவறுக்கு என்ன தண்டனையும் கிடையாது. எனவே அந்த ஆசிரியரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
போலீஸார் தடியடி
மாணவியின் நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், எங்கள் பக்கம் நியாயம் இருக்கும் போது போலீஸார் அரசு பள்ளிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினர். மக்களை கலைந்து போக சொல்லியும் அவர்கள் கேட்காததால் போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.