திருவனந்தபுரம் மக்கள் அவரை 'கலாம் ஐயர்' என்று அழைத்தார்கள்: நண்பர் ஆராவமுதன்
சென்னை: திருவனந்தபுர மக்கள் அவரை கலாம் ஐயர் என்று தான் அழைத்தார்கள் என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நண்பர் ஆராவமுதன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 1950களில் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து இறுதி வரை சைவப் பிரியராக இருந்தார். வறுமையின் காரணமாக சைவத்திற்கு மாறிய அவருக்கு அதுவே பிடித்த உணவாகிவிட்டது.
இந்நிலையில் இது குறித்து கலாமின் நண்பரும், சக ஊழியரும், பெங்களூர் இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் முன்னாள் தலைவருமான ஆராவமுதன் கூறுகையில்,
திருவனந்தபுரம்
நானும், கலாமும் 1964ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் தும்பா ராக்கெட் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம். கேரளா அல்லாத தென்னிந்திய சாப்பாடை சாப்பிட நாங்கள் தினமும் பத்து நிமிடம் நடந்து ரயில் நிலையத்திற்கு செல்வோம்.
கேன்டீன்
தும்பா நிலையத்தில் கேன்டீன் இல்லை. அருகில் உள்ள இடங்களில் நாங்கள் விரும்பும் உணவு கிடைக்காது. அதனால் தான் ரயில் நிலையத்திற்கு சென்று அங்குள்ள கடையில் சாப்பிடுவோம்.
கலாம் ஐயர்
திருவனந்தபுரத்தில் நாங்கள் இந்திரா பவன் லாட்ஜில் தங்கியிருந்தோம். அங்குள்ள மக்கள் அவரை கலாம் ஐயர் என்பார்கள். ஏனென்றால் அவர் பிராமணர்களுடன் சுற்றுவார். மேலும் அவர்களை போன்று உணவு பழக்கவழக்கம் உள்ளவர்.
முட்டை மசாலா
கலாம் சாப்பிட்ட ஒரே அசைவ உணவு கேரளா பரோட்டாவும், முட்டை மசாலாவும் தான். நான் கடந்த 1963ம் ஆண்டு அமெரிக்காவில் தான் கலாமை முதலில் சந்தித்தேன். அங்கு நாங்கள் உருளைக்கிழங்கு, பீன்ஸ், பிரெட் மற்றும் பால் ஆகியவற்றை தான் உட்கொண்டோம். வார இறுதி நாட்களில் சினிமா, ஷாப்பிங் என்று அசத்துவோம். அவ்வப்போது ஒரு இந்தியரின் வீட்டில் சாப்பிடுவோம் என்றார் ஆராவமுதன்.