ஜெ. முதல்வராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் போராட்டம்: ஏராளமானோர் கைது
திருச்சி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நாளை தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்பதை கண்டித்து மக்கள் கலை இலக்கிய கழகம், பெண்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் இன்று திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவர்கள் அனுமதி பெறாமல் மத்திய பேருந்து நிலையத்தில் இருக்கும் பெரியார் சிலை முன்பு கூடி ஜெயலலிதாவுக்கு எதிராக கோஷமிட்டனர். இது குறித்து அறிந்த போலீசார் அங்கு வந்து அவர்களை கோஷம் போடாமல் கலைந்து செல்லுமாறு தெரிவித்தனர்.
அதற்கு அவர்கள் கூறுகையில்,
இது ஜனநாயக நாடு. ஆர்ப்பாட்டம் நடத்த உரிமை உண்டு. 18 ஆண்டுகளாக நடந்த சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கின் வரலாறு கேலிக்கூத்தானது. ஜெயலலிதா தனது வருமானத்தை விட கூடுதலாக 540 சதவீதம் சொத்து சேர்த்ததாகக் கூறி அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்தார் நீதிபதி குன்ஹா.
நீதிபதி குமாரசாமி என்னவென்றால் ஜெயலலிதா 8.12 சதவீதம் அளவுக்கே சொத்து சேர்த்ததாகக் கூறி அவரை வழக்கில் இருந்து விடுவித்துள்ளார். பணம் படைத்தவர்கள் நினைத்தால் சட்டத்தை எப்படியும் வளைக்கலாம் என்பதையே இந்த தீர்ப்பு எடுத்துக் கூறுகிறது என்றனர்.
போலீசார் போராட்டக்காரர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். போராட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றதால் அவர்கள் தங்களை தனி வாகனத்தில் அழைத்துச் செல்லுமாறு கூறினர். இதையடுத்து தனி வாகனம் வரவழைக்கப்பட்டது. வாகனம் வரும் வரை அவர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக கோஷமிட்டனர்.