தோஷம் கழிப்பதாக பெண்களிடம் நகைகள் ”அபேஸ்” - போலி ஜோசியரை அடித்து, துவைத்த மக்கள்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தோஷம் கழிப்பதாக கூறி பெண்களின் நகைகளை திருடிய ஜோசியருக்கு ஊர்மக்கள் இணைந்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பழைய போச்சம்பள்ளியை சேர்ந்தவர் மகேந்திரன். கூலி தொழிலாளியான இவரது மனைவி மஞ்சுளா. நேற்று முன்தினம் மாலை மகேந்திரன் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில், ஜோதிடர் ஒருவர் மகேந்திரன் வீட்டு பக்கம் வந்துள்ளார்.அவரிடம் மஞ்சுளா ஜோதிடம் கேட்டுள்ளார். அப்போது வீட்டில் தோஷம் இருப்பதாகவும், தோஷத்தை கழித்தால் வீட்டில் நல்லது நடக்கும், இல்லையானால் உனது தாலிக்கு ஆபத்து உள்ளது என கூறியுள்ளார்.
இதற்கு பயந்த மஞ்சுளா பூஜைக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். தான் கொண்டுவந்திருந்த பூஜை பொருட்களை எடுத்து மகேந்திரன் வீட்டில் வைத்து பூஜை செய்த அந்த நபர், கொஞ்சம் புளி வேண்டும் என்று கேட்டுள்ளார். மஞ்சுளா வீட்டிலிருந்து புளி எடுத்துக் கொண்டுவந்து கொடுத்ததும், அவர் அணிந்திருந்த தங்க தோடுகளை கழற்றி கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதையடுத்து, மஞ்சுளா மற்றும் அவரது மகள் ரமணி ஆகியா இருவரும் தங்கள் காதில் அணிந்திருந்த, இரண்டு சவரன் தோடுகளை கழற்றி கொடுத்துள்ளனர்.
இதை வாங்கிய ஜோதிடர், புளியுடன் சேர்த்து நகையை உருண்டையாக பிடித்து உருட்டி தட்டில் வைத்து பூஜை செய்து முடித்தவர், பூஜையில் எரிந்து கொண்டிருந்த விளக்கு அணைந்ததும் புளி உருண்டையை உடைத்து, தோடுகளை எடுத்து கொள்ளுமாறு கூறிவிட்டு, தோஷம் கழித்ததற்கான பணத்தை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.
அவர் சென்ற சிறிது நேரத்தில், சந்தேகம் கொண்டு மஞ்சுளா புளி உருண்டையை உடைத்து பார்த்த போது, அதில் தோடுகள் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே பூஜை நடத்திய ஜோதிடர் பற்றி அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் சொல்லியுள்ளார். அந்த பகுதியில் இருந்தவ்ர்கள் சிலர் ஜோதிடரை தேடியுள்ளனர். பூஜை முடித்துவிட்டுத் சென்ற சோதிடர் போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவரை பிடித்து, பொதுமக்கள் விசாரித்தனர்.
விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே வானவபுரத்தைச் சேர்ந்த முத்து என்பதும் இவர் பல இடங்களில் தோஷம் கழிப்பதாக கூறி நகைகளை திருடியதும் தெரிந்தது. இதையடுத்து, பொதுமக்கள் அவருக்கு அடித்து, உதைத்து போச்சம்பள்ளி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.