மக்களுக்கு தெரியும் யார் பச்சை துரோகம் செய்தது என்று.. சசிகலா மீது ஓபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
நான் துரோகம் செய்துவிட்டதாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் வீண் பழி சுமத்துவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: துரோகம் செய்து விட்டதாகவும் சதி செய்து விட்டதாகவும் சசிகலா குடும்பத்தினர் வீண் பழி சுமத்துவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். மக்களுக்கு தெரியும் யார் பச்சை துரோகம் செய்தது என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் பச்சை துரோகம் செய்துவிட்டாதாக குற்றம்சாட்டுவது குறித்து நெறியாளர் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான் துரோகம் செய்து விட்டதாகவும் சதி செய்து விட்டதாகவும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தன்மீது வீண் பழி சுமத்துவதாக குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் கூறியதாவது, நான் வேண்டாம் என்று சொன்னபோது என்னை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்தீர்கள். சட்டமன்ற உறுப்பினர்களை கூப்பிட்டு நான்தான் முதல்வராக வரவேண்டும் என்று உங்களுடைய ஆதரவு வேண்டும் என்று நான் கேட்டுள்ளேனா?
அமைச்சர்களிடம் நான் கேட்டுள்ளேனா. தலைமைக் கழக நிர்வாகிகளிடம் நான் கேட்டுள்ளேனா. எந்த முயற்சியும் நான் எடுக்கவில்லையே. அப்படி இருக்கையில் நான் பச்சை துரோகம் செய்திருக்கிறேன் என்று சொல்வதற்கு என்ன காரணம்.
இதில் எது பச்சை துரோகம். மக்களுக்கு தெரியும் யார் துரோகம் செய்தது என்று. சதி செய்துவிட்டார் என்று சொல்கிறார்கள். என் அரசியல் வாழ்விற்கு வீண் பழி சுமத்துகிறார்கள். இதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.