தமிழர்களை வேற்றுகிரகவாசிகளாக நடத்தும் மத்திய அரசு- கதிராமங்கலத்தில் நூதன போராட்டம்
கதிராமங்கலத்தில் உடல் முழுவதும் வெள்ளை நிற சாயம் பூசிக் கொண்டு நூதன முறையில் மக்கள் சேவை இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்: கதிராமங்கலத்தில் 15-ஆவது நாளாக மக்கள் நடத்திய காத்திருப்பு போராட்டத்தில் மக்கள் சேவை இயக்கத்தினர் தங்கள் உடலில் வெள்ளை நிற சாயத்தை பூசிக் கொண்டு வேற்றுகிரக வாசிகள் போல் வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.
கதிராமங்கலத்தில் கடந்த ஜூன் 30-ஆம்தேதி எண்ணெய் கிணறு அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது. இதனால், பதற்றமடைந்த கிராமத்தினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.
இதைத் தொடர்ந்து ஓஎன்ஜிசி நிறுவனம் கதிராமங்கலம் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
போலீஸ் காவல்
கைது செய்யப்பட்ட 10 பேரையும் வரும் 28-ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே பேராசிரியர் ஜெயராமனின் தந்தை தங்கவேல் காலமானதைத் தொடர்ந்து அவருக்குக் கடந்த சனிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கிய மதுரை கிளை நீதிமன்றம்.
15-ஆவது நாள்
ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் அய்யனார் கோயில் தோப்பில் குடியேறி போராட்டம் நடத்துகிறார்கள். நேற்று 15-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம் நடந்தது. இதில் 60 பேர் பங்கேற்றனர்.
10 பேரை விடுவிக்க...
அப்போது கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 பேரையும் எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
வெள்ளை சாயம் பூசி
மக்கள் சேவை இயக்கத்தின் தலைவர் தங்க சண்முகசுந்தரம், உழவர் உரிமை இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தங்கராசு, மக்கள் விவசாய சங்க மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கதிராமங்கலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் உடல் முழுவதும் வெள்ளை நிறத்தாலான சாயத்தை பூசிக் கொண்டு வேற்று கிரகவாசிகள் போல வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
பாராமுகம் காட்டுகிறது...
அப்போது மக்கள் இயக்கத்தினர் கூறுகையில், மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை வேற்று கிரகவாசிகள் போல் நடத்துகின்றன. விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பாராமுகம் காட்டுகிறது. இதை வெளிப்படுத்தும் விதமாகதான் நூதன முறையில் போராட்டம் நடத்துகிறோம் என்று தெரிவித்தனர்.