பந்த் எதிரொலி.. ரீசார்ஜ் செய்ய முடியாமல், பால் வாங்க முடியாமல் அலைந்த மக்கள்!
சென்னை: விவசாயிகள் பந்த் எதிரொலியாக மன்னார்குடி அருகே கோட்டூர் என்ற இடத்தில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் காரணமாக மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரியில் முழு அளவில் கடைகள் அடைக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு வணிகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
தொமுச போன்ற எதிர்க்கட்சி தொழிற்சங்கங்கள் பேருந்துகளை இயக்காததால் குறைவான பேருந்துகளே ஓடுகின்றன. போராட்டத்தை ஒட்டி பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தக் குவிந்து வருவதால் போலீஸார் அசம்பாவிதத்தைத் தடுக்க ஆயத்தமாக வைக்கப்பட்டுள்ளனர்.
பாஜக இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தரவில்லை. அதிமுக வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை. ஆனால் விவசாயிகள் போராட்டம் என்பதால் அதிமுகவினரும் கூட இந்தப் போராட்டத்திற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பந்த் நடந்தபோதிலும் கூட ஆட்டோக்கள் வழக்கம் போல ஓடுகின்றன. அரசுப் பேருந்துகளும் வழக்கமான அளவில் ஓடுகின்றன. சாலைகளில் மக்கள் நடமாட்டம் வழக்கம் போலவே உள்ளது.