நெல்லையில் தொடரும் பஸ் ஸ்டிரைக்- விழி பிதுங்கும் பொதுமக்கள்
நெல்லை: நெல்லையில் தொடர்ச்சியாக பஸ் போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 12 ஆவது ஊதிய உயர்வை அமல்படுத்த கோரி பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊழியர்கள் போராட்டம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மூன்றாவது நாளாக போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நீடித்து வருகின்றது.
நெல்லையை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளுக்கு பஸ் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. நெல்லை சந்திப்பு பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து நகர்புறங்கள் மற்றும் புறநகர்க்கு செல்லும் ஒரு சில பஸ்கள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது.
புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், அரசு போக்குவரத்து கழக டெப்போவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். திருச்செந்தூர், கோவில்பட்டி, தூத்து்க்குடி ஆகிய பகுதியில் போராட்டத்துக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லையில் இருந்து சங்கரன்கோவில் சென்ற அரசு மீது கல்வீசி தாக்கப்பட்டதால் சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து அதிகாலை 3 மணி முதல் பஸ் இயக்கப்படவில்லை.
நெல்லை மாநகரத்தில் 317 பஸ்களும், மாவட்டத்தில் 470 பஸ்களும் இயக்கப்படும். ஆனால் ஸ்டிரைக் எதிரொலியாக நெல்லை மாநகரத்தில் 200 பஸ்களும், மாவட்டத்தில் 250 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. பஸ் போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.