ஜெ. விடுதலைக்காக போராடியவர்கள்... சசிகலாவுக்காக "மினி மம்" போராட்டம் கூட நடத்தலையே!
ஜெயலலிதா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட போது அவரை விடுதலை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் சசிகலாவுக்காக அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கூட போராடவில்லை.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2014ஆம் ஆண்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட போது அதிமுகவினர் மட்டுமின்றி தமிழக மக்களும் அவரை விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடத்தினர். ஆனால் தற்போது சசிகலா சிறையில் அடைக்கப்பட்டு 20 நாட்கள் கடந்தும் "சின்னம்மாதான்" எல்லாம் என்று கூறிய அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கூட அவரை சீண்டவில்லை.
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் கர்நாடக அரச செலவில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்ககெல் டி குன்ஹா முதல்முறையாக தீர்ப்பு வழங்கினார்.
ஜெயலலிதா உட்பட 4 பேரும் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹா ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார். எஞ்சிய 3 பேருக்கு தலா 10 கோடி ரூபாயும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.
தீர்ப்பால் அதிர்ந்த தமிழகம்
தவறுக்கான தண்டனையாக இருந்தாலும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட இந்த தண்டனை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிமுகவினர் மட்டுமின்றி தமிழக மக்கள் குறிப்பாக பெண்கள் பெரும் வேதனையடைந்தனர்.
போராட்டங்கள் வெடித்தன
ஜெயலலிதாவுக்கு என குடும்பம், குழந்தைகள் இல்லாமல் இருந்ததது அவர் மீதான பரிதாபத்தை அதிகரித்தது. ஜெயலலிதாவை உடடினயாக விடுதலை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன.
சிறப்பு பூஜைககள்
பேருந்துகள் மீது கல்வீச்சு, கடையடைப்பு உள்ளிட்ட வன்முறைகளும் அரங்கேறின. தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
தீச்சட்டி எடுத்த மகளிரணி
அதிமுக மகளிரணியினர் தீச்சட்டி எடுத்தும் அங்கப்பிரதட்சனம் செய்தும் ஜெயலலிதா விடுதலையாக வேண்டினர். பால்குடம், அலகு குத்தல் என நாள்தோறும் வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்டன.
குன்ஹாவுக்கும் கண்டனம்
தற்கொலைகளும் அரங்கேறின. அதிர்ச்சி மரணங்களும் ஏற்பட்டது. தீர்ப்பை விமர்சித்தும் நீதிபதி குன்ஹாவை கண்டித்தும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்பட்டன.
'காவிரியே நீயே வச்சுக்கோ அம்மாவ கொடுத்துடு'
காவிரி விவகார காழ்ப்புணர்ச்சியில் தான் ஜெயலலிதாவுக்கு எதிராக இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. 'காவிரியே நீயே வச்சுக்கோ அம்மாவ கொடுத்துடு' போன்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களும் வைக்கப்பட்டன.
பல தரப்பினரும் போராடிய ஜெ
வணிகர்கள், திரைத்துறையினர், விசைத்தறியாளர்கள், மீனவர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஜெயலலிதாவை விடுதலை செய்யவேண்டும் என போராட்டம் நடத்தினர். ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதம், மவுன போராட்டம், கறுப்புக்கொடி போராட்டம் என அனைத்து வகை போராட்டங்களும் அரங்கேறின.
சிறை அருகே மொட்டையடித்து போராட்டம்
ஜெயலலிதா அடைக்கப்பட்டிருந்த பரபரப்பன அகர்ஹார சிறைக்கு அருகிலேயே அதிமுகவினர் மொட்டையடித்து போராட்டங்களை நடத்தினர். அனைத்து மதத்தினரும் தங்களின்ன வழக்கப்படி யாகம், தொழுகை என வழிபாடு நடத்தினர்.
அண்டை மாநிலங்களிலும் போராட்டம்
புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. தற்போது ஜெயலலிதா இல்லை. சசிகலா , இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதிதீவிர விசுவாசிகள் கூட போராடவில்லை
அவரது அதிதீவிர விசுவாசிகளான எம்எல்ஏக்களும் எம்பிக்களும் கூட இதுவரை எந்த போராட்டம் நடத்தவில்லை. சட்டையில் ஒரு கறுப்பு பேட்ச் கூட அணியவில்லை. சின்னம்மாதான் எல்லாம் என்று கூறியவர்கள் கூட அவர் உள்ளேயே இருப்பது தான் நல்லது என நினைக்கிறார்களோ என்னவோ...
பேச்சுக்குகூட வாய்திறக்கவில்லை
ஜெயலலிதா போலவே நடை, உடை,பாவனை என கொண்டையை கூட விட்டு வைக்காமல் அப்படியே ஜெயலலிதாவை காப்பியடித்து 'சின்னமாவாகிப்' போன சசிகலா சிறையில் அடைக்கப்பட்டு 20 நாட்கள் கடந்து விட்டது. அவரை விடுதலை செய்யக்கோரி யாரும் இதுவரை சும்மா பேச்சுக்குகூட வாய்திறக்கவில்லை.
என்னதான் ஜெ.வை காப்பியடித்தாலும் அவர் மக்களிடையே பெற்ற செல்வாக்கை சசிகலா எப்போதும் பெற முடியாது என்பதை சசி தரப்பு இப்போதாவது புரிந்தால் சரி...