லாட்ஜில் ரூம் ஃபுல்.. ராமேஸ்வரம் பிளாட்பார்ம்களில் படுத்து தூங்கி அஞ்சலி செலுத்திய மக்கள்
ராமேஸ்வரம்: மக்களின் ஜனாதிபதி, இந்தியாவின் முன்னாள் முதல் குடிமகன், முப்படைகளின் முன்னாள் தலைவர், இளைஞர்களின் எழுச்சி நாயகன், அப்துல் கலாம் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதில் இருந்தும் வந்து ராமேஸ்வரத்தில் வந்து குவிந்த மக்கள், ஹோட்டல்களில் அறை கிடைக்காமல், பஸ், ரயில் நிலையங்களில் படுத்து தூங்கி எழுந்து அஞ்சலி செலுத்தினர்.
அப்துல் கலாமின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்த்துவிட வேண்டும், அந்த நாயகனின் காலடியில் தங்கள் கண்ணீரை சேர்த்துவிட வேண்டும் என்ற தீராத ஏக்கத்தால், மாநிலம் முழுவதிலும் இருந்தும் மக்கள் வெள்ளம், வெள்ளமாக ராமேஸ்வரத்துக்கு வந்தனர். நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை பல தரப்பட்ட மக்களையும், அப்துல் கலாம் என்ற ஒரு தாரக மந்திரம் இணைத்து அழைத்து வந்திருந்தது.
தமிழக அரசு இன்று விடுமுறை அறிவித்திருந்ததும், திருச்சி, மதுரையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளும், மக்களை ராமேஸ்வரம் கொண்டு வந்து சேர்க்க உதவியது. ஆனால் ராமேஸ்வரம் மிகச்சிறிய ஒரு தீவுப்பகுதி என்பதால், கடல்போல வந்த மக்களை தாங்க முடியாமல் நகரமே குலுங்கியது.
ராமேஸ்வரம், ஆன்மீக தலம் என்பதால், அங்கு வருடம் முழுவதும் பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதற்காக அங்கு, நூற்றுக்கணக்கான தங்கும் விடுதிகள் உள்ளன. ஆயினும், கலாமுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த மக்களுக்கு ஹோட்டல், தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைக்கவில்லை.
நேற்று முதல் ராமேஸ்வரத்தில் மக்கள் குவிந்து கொண்டிருந்தனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்ததிருந்தனர். தங்கும் விடுதி கிடைக்கவில்லை என்பதற்காக அவர்கள் திரும்பி செல்லவில்லை. பஸ் நிலையங்கள், ரயில் நிலையம், பிளாட்பார்ம்களில் படுத்து எழுந்து இன்று கலாமுக்கு அஞ்சலி செலுத்தினர். பணக்காரர், ஏழை, ஜாதி, அரசியல் வேறுபாடின்றி, அனைவருக்கும் பிளாட்பார்ம்களில் படுத்து தூங்கியதை பார்க்க முடிந்தது.