எங்கிட்டு திரும்பினாலும் கேட் போடுறாங்களே... ஆர்கே நகரில் திணறும் தினகரன்
சென்னை
சென்னை: ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரம் செய்யும் டிடிவி தினகரனுக்கு, எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. எங்கு சென்றாலும் எதிர்ப்பு குரல்கள்தான் எதிரொலிக்கின்றன.
ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன், நேற்று கொடுங்கையூர் ஏரியாவிலுள்ள எழில் நகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அவருடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பா.பெஞ்சமின் ஆகியோரும் ஒவ்வொரு வீடாக போய் வாக்கு சேகரித்தனர்.
வெள்ள சேதம்
அப்போது பெண்கள் சிலர் தினகரனை முற்றுகையிட்டு, எதிர்ப்பு கோஷமிட்டனர். தங்கள் ஏரியாவை வெள்ளம் சூழ்ந்தபோது, எங்கள் உடைமைகள் அனைத்தும் பறிபோயின. ஒரு வீட்டுக்கு ரூ.1 லட்சம் அளவுக்கும் மேல் செலவானது ஆனால், அரசின் நிவாரணம் ரூ.5 ஆயிரம்கூட கிடைக்கவில்லை. எங்க ளுக்கு ஆறுதல் கூறக் கூட உங்கள் கட்சிக்காரர்கள் யாரும் வரவில்லை என கூறினர்.
கண்டுகொள்ளவில்லை
அதேபோல தினகரன் ஆட்டோவில் பிரசாரம் செய்தபோது, அப்பகுதி குடிசைவாசிகள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, இந்த தொகுதி மக்களை அரசு கண்டுகொள்ளவேயில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
வீட்டு வசதி
தொகுதி மக்களுக்கு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு கொடுப்பதாக ஜெயலலிதா உறுதி அளித்திருந்த நிலையில், அதற்கான கோப்புகளும் தயார் செய்யப்பட்டபோதிலும், இதுவரை வீடு கட்டிக்கொடுக்கப்படவில்லை என்று தினகரனிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சியில் நாங்கதான்
வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை தினகரனுடன் வந்த அதிமுக-அம்மா கட்சி நிர்வாகிகள் சமாதானப்படுத்தினர். மேலும், ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும் நான் நிறைவேற்றி வைப்பேன் என டிடிவி தினகரன் உறுதியளித்தார். இன்னும் 4 வருடங்கள் நாங்களே ஆட்சியில் இருப்போம் என்பதால், வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என டிடிவி தினகரன் உறுதியளித்தார்.