கடலூரில் கர்ப்பிணி மனைவி வளர்த்த நாயை அடித்துக் கொன்ற கணவர்... தம்பதி தற்கொலை
கடலூர்: கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே கர்ப்பிணி மனைவி வளர்த்த நாயை கணவர் அடித்துக் கொன்றதால், மனைவி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கணவரும் தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள புதுக்குளத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராசு (30). வேம்பு(19) தம்பதி. வேம்பு 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் செல்லப் பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். வேம்பு நாய் வளர்ப்பது கோவிந்தராசுக்கு பிடிக்கவில்லையாம். கடந்த புதன் கிழமை இது தொடர்பாக கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரம் அடைந்த கோவிந்தராசு நாயை தாக்கியதில், நாய் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறிது நேரம் கழித்து வீட்டின் மாடிக்கு கோவிந்தராசு சென்றுள்ளார். அப்போது வேம்பு தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கோவிந்தராசு, வேம்புவின் சடலத்தை கீழே இறக்கி வைத்துவிட்டு அதே கயிற்றில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அடுத்த நாள் காலையில் அவர்கள் மாடியில் சடலமாக கிடப்பதைக் கண்ட உறவினர்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.