தொண்டை மண்டல ஆதீனம் பெங்களூரு சென்றது ஏன்?- நித்தியானந்தா மீது புகார்
மாயமான தொண்டை மண்டல ஆதினம் பெங்களூருவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மடத்தை கையகப்படுத்த நித்யானந்தா முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.
பெங்களூரு: தொண்டை மண்டல ஆதினம் திருவம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரியாரை நித்யானந்தா கடத்தியிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஆதீன மடத்தின் சன்னிதானத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மீண்டும் நித்தியானந்தா அவரை பெங்களூருக்கு கடத்திச் சென்று இருக்கலாம் என்றும் ஆதினம் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
காஞ்சிபுரம் பரமசிவன் கோயில் தெருவில் உள்ளது தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாசர் மடம்.
இந்த மடத்தின் 232வது பட்டமாக திருவம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரியார் இருந்து வருகிறார். இந்த மடத்துக்கு வட தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.
இந்த சொத்துக்களின் வாடகை மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை மட நிர்வாகமே கவனித்து வருகிறது.
இந்நிலையில், ஆதீனத்தின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்துடன் நித்தியானந்தா சீடர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள மடத்தில் தங்கியிருப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து நித்தியானந்தாவிடம் மடத்தின் சொத்துக்கள் செல்வதை தடுக்க தொண்டை மண்டல முதலியார்கள் குழு ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த குழு நிர்வாகிகளின் கூட்டம் ஞாயிறன்ற நடப்பதாக இருந்தது. இதற்காக, ஆதீன மடத்தின் முன்பு நிர்வாகிகள் கூடினர். ஆனால் மடம் பூட்டப்பட்டு கிடந்தது.
எனவே, மடத்தை முற்றுகையிட்ட நிர்வாகிகள் சங்கத்தின் மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆதீன சன்னிதானத்தை காணவில்லை. மேலும் அவரை நித்தியானந்தா ஆட்கள் கடத்தி இருக்கலாம் என்று சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று மடத்தில் விசாரணை நடத்தினர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கொண்ட தொண்டை மண்டல ஆதீனம் ஞானபிரகாசர் பெங்களூருவில் இருப்பதாக போலீசாரின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரியாரை, காஞ்சி போலீசார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது ஆதீன பரமாச்சாரியார், தான் பெங்களூரில் ஒரு பூஜைக்காக வந்திருக்கிறேன். மூன்று நாள் கழித்து காஞ்சிபுரம் வருவேன். அப்போது உங்களுக்கு தகவல் அளிக்கிறேன் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுத்த குழுவினர், ஆதீன மடத்தின் சன்னிதானத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மீண்டும் நித்தியானந்தா அவரை பெங்களூருக்கு கடத்திச் சென்று இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
இதனிடையே தொண்டை மண்டல ஆதினத்துடன் நித்யானந்தா இருக்கும் புகைப்படம் நித்யானந்தாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.