போலீஸ் ஸ்டேஷனில் குண்டு வீசியது யார்.. 50 பேரிடம் விசாரணை.. கண்டுபிடிக்க முடியால் திணறும் போலீசார்
சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசியது யார் என 50 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆனாலும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை பிடிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
நேற்று அதிகாலை மர்மநபர்கள் சிலர் சென்னையின் மையப்பகுதியில் உள்ள தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதனால் காவல்நிலையத்தில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வெடிக்காத மற்றொரு குண்டு கண்டெடுக்கப்பட்டது. இதனால் சென்னையில் மேலும் பரபரப்பு அதிகரித்தது. சந்தேக நபர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரை 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆனாலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்பதால் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், காவல் நிலையத்தின் அருகில் உள்ள கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.