தொடரும் திண்டுக்கல் பதற்றம்:பாஜக அலுவலகம், நிர்வாகி கார் மீது அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுவீச்சு!
திண்டுக்கல்: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் திண்டுக்கல்லில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் மற்றும் அக்கட்சியின் பிரமுகர் போஸின் கார் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினராக இருந்த சங்கர் கடந்த வாரம் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் திண்டுக்கல் நகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான நிலையில் நேற்று முன் தினம் நேருஜி நகர் மசூதியில் மர்மநபர்கள் வெடிகுண்டு வீசினர். இந்நிலையில் நேற்று பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் போஸ் என்பவரது கார் மீது மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
இதில் போஸின் கார் தீப்பிடித்து எரிந்து நாசமானது. இதேபோல் திண்டுக்கல் கரூர் சாலையில் உள்ள பாஜக அலுவலகம் மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இச்சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே இந்து முன்னணியின் சங்கர் வெட்டப்பட்டுள்ளார்; கோவையில் மற்றொரு இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் திண்டுக்கல்லில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ள சம்பவம் மாவட்டத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.