சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. 6 பேர் கைது
சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு விசியதாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் என 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 13ம் தேதி அதிகாலை மர்மநபர்கள் சிலர் சென்னையின் மையப்பகுதியில் உள்ள தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
இந்தத் தாக்குதலில் காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
வெடிக்காத குண்டு
இதனைத் தொடர்ந்து, தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வெடிக்காத மற்றொரு குண்டும் கண்டெடுக்கப்பட்டது. இதனால் சென்னையில் மேலும் பரபரப்பு அதிகரித்தது.
50க்கும் மேற்பட்டோர் விசாரணை
50க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களை போலீசார் பிடித்து விசாரித்து வந்தனர். ஆனால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் நீடித்தே வந்தது.
சிசிடிவி கேமரா
போலீஸ் நிலையத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்படாமல் இருந்ததால் குற்றவாளிகளை பிடிக்க தாமதம் ஏற்பட்டது. இதனால் காவல் நிலையத்தின் அருகில் இருந்த கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்றன.
6 பேர் கைது
இந்நிலையில், இந்தக் குற்றச்சம்பவம் தொடர்பாக 6 பேரை பிடித்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே வினோத், மணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 4 பேரை இன்று போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் இரண்டு பேர் தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என்று காவல்துறை இணை ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.