பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: கால் டாக்சி-ஆட்டோ, பஸ் கட்டணம் குறையுமா?
சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்து வருவதை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை பலமுறை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆட்டோ, கால் டாக்ஸிகளின் வாடகைக் கட்டணம் மட்டும் குறைக்கப்படவேயில்லை என்பது நுகர்வோர்களின் புகாராகும்.
சென்னையில் என்னதான் ஆட்டோக்களுக்கு மீட்டர் போட்டு விலை நிர்ணயம் செய்தாலும் அடித்து பிடித்துதான் காசு வாங்குகின்றனர். அதுவும் மழை நேரத்தில் ஆட்டோ பிடித்தால் அவ்வளவுதான் பாதி பணத்தை அவர்களிடம் கொடுத்து விட வேண்டியதுதான்.
காலை நேரத்தில் ரயில் நிலையத்தில் மாட்டியவர்களுக்குத்தான் இந்த அவஸ்தை தெரியும். சில கிலோ மீட்டர்கள் இருக்கும் தூரத்திற்கு கூட ரூ.200 முதல் ரூ.300 வரை கூசாமல் கேட்பார்கள். நமக்கும் வேறு வழியில்லை என்பதால் ஆட்டோ ஓட்டுநர்களும், கால் டாக்ஸி நிறுவனத்தினரும் கேட்பதை கொடுப்பதை தவிர வேறு வழியில்லை.
கட்டணக் கொள்ளை
சென்னை தவிர, மதுரை, திருப்பூர், கோவை உள்ளிட்ட நகரங்களில் ஆட்டோக்கள் அடிக்கும் கட்டணக்கொள்ளை நுகர்வோர்களை வாட்டி வதைக்கிறது.
சர்வதேச சந்தை விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் அதிகாரம் எண்ணை நிறுவனங்களுக்கு தற்போது உள்ளது. இதனால் மாதம் இருமுறை எண்ணை நிறுவனங்கள் விலையை மாற்றியமைக்கின்றன.
8 முறை விலை குறைப்பு
இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இன்று வரை 8 முறை பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஜூலையில் பெட்ரோல் விலை ரூ. 2.17 குறைக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி ரூ.1.15, 15-ஆம் தேதி ரூ. 2.30, 31-ஆம் தேதி ரூ. 1.92 குறைந்தது.
அக்டோபர் 1-ந் தேதி 68 பைசாவும், 15-ந் தேதி ரூ. 1.28-ம் பெட்ரோல் லிட்டருக்கு குறைக்கப்பட்டது. 8 முறை குறைக்கப்பட்டதன் மூலம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 12.05 குறைந்துள்ளது.
5 மாதத்தில் டீசல் விலை
இதே போல ஜூலை 1-ஆம் தேதி 59 பைசாவும், ஆகஸ்ட் 1-ஆம் தேதி 61 பைசாவும், ஆகஸ்ட் 31-ஆம் தேதி 61 பைசாவும், டீசல் விலை குறைந்துள்ளது.
கடந்த மாதம் 19-ஆம் தேதி டீசல் விலை மட்டும் ரூ. 3.64 குறைந்தது. இன்று மேலும் ரூ. 2.41 குறைக்கப்பட்டுள்ளது. 12 நாட்களில் டீசல் விலை மட்டும் 6 ரூபாய் 5 பைசா குறைந்துள்ளது. கடந்த 5 மாதத்தில் டீசல் விலை 8 முறை குறைக்கப்பட்டதன் மூலம் மொத்தம் ரூ. 7.86 குறைந்துள்ளது.
குறையும் போக்குவரத்து செலவு
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் சரக்கு போக்குவரத்து செலவு கட்டாயம் குறைந்து இருக்கும். மோட்டார் போக்குவரத்து செலவும் கணிசமாக குறையும்.
இதனால் ஆம்னி பஸ், வாடகைக்கார், கால்டாக்சி, வாடகை வேன், ஷேர் ஆட்டோ (அபே) மற்றும் சாதாரண ஆட்டோக்களிலும் பெட்ரோல் - டீசல் செலவு வெகுவாக குறைந்துள்ளது.
கட்டணம் குறைந்தபாடில்லை
ஆனால் இதுவரை எந்த போக்குவரத்து நிறுவனமும் பஸ் கட்டணத்தை குறைக்கவில்லை. ஆட்டோ தொழிலாளர்களும் கால் டாக்சி, ஓட்டுனர்களும் கட்டணத்தை குறைக்கவில்லை.
பயணிகள் வலியுறுத்தல்
போக்குவரத்து துறை நிர்ணயம் செய்துள்ள பழைய கட்டணத்தை மாற்றி பெட்ரோல் - டீசல் விலை குறைப்புக்கு பின் புதிய கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைந்த போதிலும் ஆட்டோ, ஆம்னி பஸ், வாடகை கார்கள் போன்ற வாகனங்கள் இதுவரை கட்டணத்தை குறைக்காமல் இருப்பது ஏன் என்பது பொதுமக்களின் கேள்வியாகும்.
50 பைசா ஏற்றினாலே
டீசல் லிட்டருக்கு 50 பைசா ஏற்றினாலே சட்டென்று 10 ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்திகின்றனர் ஆட்டோ ஓட்டுனர்கள்.
அதேசமயம் தற்போது லிட்டருக்கு 7 ரூபாய் வரை டீசல் விலை குறைந்தும் வாடகைக் கட்டணத்தை குறைக்காமல் மவுனமாக இருக்கின்றனர் ஆட்டோ, டாக்சி உரிமையாளர்கள். இந்த கட்டண விகிதத்தை மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாற்றியமைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு நடவடிக்கை எடுக்குமா?