பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.. இன்று காலை முதல் அமல்
சென்னை: பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை மாற்றியமைத்து வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றியமைப்பது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலித்து வருவதாக சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது.
இந்நிலையில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜூன் 16-முதல் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை பங்க் உரிமையாளர்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து தாங்கள் நடத்தவிருந்த போராட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளனர். மேலும் நள்ளிரவு 12 மணிக்கு மாற்றப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இனி காலை 6 மணிக்கு புதிய விலை நிர்ணயிக்கப்பட்டு அமலில் இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகளும், டீசல் லிட்டருக்கு 18 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு, இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.